டிஜிட்டல் பேனருக்குத் தடை.. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கடை உரிமையாளர்கள்!
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: டிஜிட்டல் பேனர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதையடுத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்த டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அன்று முதலே டிஜிட்டல் பேனர் தொழில்கள் சற்று மந்தமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியானார். இதன் காரணமாக அரசியல் கட்சியினர் இனி டிஜிட்டல் பேனர் விளம்பர பேனர்கள் வைக்கபோவதில்லை என அறிவித்துள்ளனர்.
இதனால் மாநிலத்தில் இத் தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியுள்ள சுமார் 4லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட பேனர் உற்பத்தியாளர்கள் சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் பல்வேறு பகுதிகளில் பேனர்கடைகளுக்கு கண்ணீர் அஞ்சலி என போஸ்டர் அடித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்களது கடை முன்னும் இதே பேனரை கட்டியுள்ளனர். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பேனர் கடைகள் உற்பத்தியாளர்கள் இதே தொழிலை நம்பி உள்ளனர்.
அரசு மற்றும் அனைத்து கட்சி கட்சியினர் இந்த நிலைப்பாட்டால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதே தொழிலை நம்பியுள்ள மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்று வேலை இன்றி தவிப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் அனைத்து கட்சியினரும் டிஜிடல் பேனர் மீதான தடையை நீக்க மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.