சாவியோட நின்னுச்சா.. அதான் ஆட்டையைப் போட்டோம்.. சிரிக்க வைத்த திடீர் திருடர்கள்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாவியுடன் ஒருவர் டூவீலரை சாலையில் நிறுத்தியிருந்தார். அதைப் பார்த்த 3 பேர் வண்டியை சுட்டுச் சென்று பின்னர் போலீஸாரிடம் சிக்கினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இலந்தைகுளம் பகுதியில் கருப்பையா என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை சாலையின் சாவியுடன் ஓரத்தில் நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்கள் சாவியுடன் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை பா்த்துள்ளனர்.
திடீரென அவர்களுக்கு குறுக்குப் புத்தி வேலை செய்ய நைஸாக அந்த பைக்கை திருடிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து பதறிப் போன கருப்பசாமி அவர்களைப் பிடிக்க முயன்றார். முடியவில்லை. பின்னர் இது குறித்து வத்திராயிருப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை அடுத்து சந்தேகத்தின் பேரில் வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த போத்திராஜா, ராஜபாண்டி மற்றும் எம்.புதுப்பட்டியை சார்ந்த மணி ஆகிய 3 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் 3 பேரும் வந்ததாகவும் இடப்பற்றாக்குறையால் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து செல்ல கடினமாக இருந்ததால் சாலையின் ஓரத்தில் சாவியுடன் நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றதாகவும் திட்டமிட்டு திருடும் நோக்கத்துடன் திருடவில்லை எனவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளது காவல் துறையினரையே சிரிப்படையச் செய்தது.