தமிழக மக்களின் கடும் எதிர்ப்பால் இந்தி திணிப்பிலிருந்து பின்வாங்கிய மத்திய அரசு.. எம்.பி வெங்கடேசன்
விருதுநகர்: தமிழக மக்கள் ஒற்றுமையுடன் எதிர்த்ததால் தான், இந்தி திணிப்பிலிருந்து மத்திய அரசு பின்வாங்கியது என மதுரை மக்களவை தொகுதி எம்.பி-யான வெங்கடேசன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில், மும்மொழி கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில், 6-ம் வகுப்பு முதல் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, மத்திய அரசு யார் மீதும் இந்தியை திணிக்காது என, மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து விளக்கம் அளித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை எம்.பி வெங்கடேசன், புதிய கல்விக் கொள்கையில் இந்தியை கட்டாயமாக்கவில்லை என்பதோடு மட்டும் இப்பிரச்சனையை விட முடியாது. புதிய கல்விக் கொள்கை என்பதே கல்வி மீதான மாநில அரசின் உரிமை பறிப்பு செயலாகும் என கண்டனம் தெரிவித்துள்ளார்
கல்வியை தனியார் மயமாக்குவதும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாக உள்ளது என சாடினார். தமிழக மக்கள் இந்தி திணிப்பை ஒற்றுமையோடு எதிர்த்ததால் தான் மத்திய அரசு பின்வாங்கியுள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட அதிகாரி அதிரடி டிரான்ஸ்பர்!
தமிழகத்தில் ஒருமித்த கருத்துடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஏராளமானோர் உள்ளனர். தமிழக மக்களின் நலனை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணிக்குமானால், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரலெழுப்பி வெற்றி பெறுவோம் என்றார்.
மேலும் பேசிய வெங்கடேசன், சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, மதுரை ஆகிய பகுதிகளில் கிடைத்து வரும் தொன்மையான பொருட்களை பார்க்கும் போது, தமிழர்களின் நாகரீகம் மிக தொன்மையானது என்ற நமது கருத்து மேலும் உறுதியாகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் வளமான மனித சமுதாயம் வாழ்ந்த இடங்களாக மேற்கண்ட பகுதிகள் திகழ்ந்துள்ளன. ஆனால் இது குறித்த தெளிவான பார்வை நமது தொல்லியல் துறைக்கே இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் தொல்லியல் துறைகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, தமிழர்களின் பெருமையை உலகறிய செய்வோம் என்றார்.
ஒட்டுமொத்த தமிழ் பண்பாட்டின் அடையாளமாக மதுரை திகழ்கிறது. மதுரைக்காக குரல் கொடுப்பது என்பதே தமிழ்நாட்டுக்காக குரல் கொடுப்பது போன்றது தான். தமிழ்ப் பண்பாடு, கலாசாரம், மொழி என தமிழ் சமூகத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக நிற்போம். தமிழக பிரச்னைகளுக்காக நான் குரல் கொடுப்பேன். மதுரை தொகுதியின் மேம்பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பேன்.
தமிழகத்திலிருந்து ஜிஎஸ்டி வருவாய் அதிகளவில் மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால் விகிதாசார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிப்போம் என்றார்.