"என்ன ஆத்தா இப்படி பண்ணிட்டே.. கருணை காட்டு" தீச்சட்டியுடன் விருதுநகர் வீதிகளில் வலம் வந்த தனலட்சுமி
விருதுநகர் அம்மன் கோயிலில் பெண் நேர்த்திக்கடனில் ஈடுபட்டார்
விருதுநகர்: "என்ன ஆத்தா.. இப்படி பண்ணிட்டே.. நீ கோபப்பட்டா நாங்க தாங்க மாட்டோம்.. இந்த கொரோனா கூட உன்னோட கோபம்தான். எங்கள மன்னிச்சிரு.. கொஞ்சம் கருணை காட்டு" என்று பெண் ஒருவர் தன்னந்தனி ஆளாக தீச்சட்டி ஏந்தி விருதுநகர் அம்மன் கோயிலை வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது!
விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது... இந்த திருவிழா கடந்த மார்ச் 15ல் தொடங்கியது.. ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் திருவிழா ரத்து செய்யப்பட்டது.
மேலும் மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றி அம்மனை வழிபடுமாறும் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதேபோல, நடைபெற இருந்த பங்குனி பொங்கல் மற்றும் தீச்சட்டி திருவிழாவும் நடப்பதாக இருந்து அவையும் ஊரடங்கு உத்தரவால் நடைபெறவில்லை.
இந்நிலையில் விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் தீச்சட்டி ஏந்தினார்.. இவருக்கு வயது 48... பங்குனி திருவிழாவை முன்னிட்டு தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டியிருந்தார்.
ஆனால் விழா ரத்தாகிவிட்டால், நேர்த்திக்கடனை செலுத்த முடியாமல் போய்விட்டதே என மனம்வருந்தினார்.. அதனால் இவர் கைகளில் தீச்சட்டி ஏந்தியபடி அங்கிருந்த தெருக்களில் வலம் வந்தார்.. கூட்டம் போட்டு தீச்சட்டி ஏந்தினால்தானே தவறு, இப்படி தனி ஒரு நபராக தீச்சட்டி ஏந்தினால் ஒன்றும் தவறு இல்லையே, இப்படியே என் நேர்த்தி கடனை செலுத்தி விட்டு போயிடறேனே.. என்று சொல்லி கைகளில் அக்னி குண்டத்துடன் வலம் வந்தார்.
Recommended Video
விருதுநகர் சாலையில் இப்படி தீச்சட்டியுடன் வந்த பெண்ணை பார்த்ததும் பொதுமக்களில் சிலர் பரவசம் ஆகிவிட்டனர்.. பிறகு தனலட்சுமி மாரியம்மன் கோயில் முன்பு வந்து நின்று சாமியாடினார். அப்போது கூடியிருந்த பெண்கள் குலவை சத்தம் எழுப்பினர்.. இறுதியாக கோயில் வாசல் முன்பு ஏந்தி வந்த தீச்சட்டியை இறக்கி நேர்த்தி கடனை செலுத்தி விட்டு தனலட்சுமி சென்றார். தனலட்சுமி சாமியாடியதை கோயில் வழியாக மார்க்கெட் சென்ற மக்கள் உட்பட அனைவரும் கண்டு மலைத்தனர்.. இதனால் அப்பகுதியே சில மணி நேரம் பரபரப்பானது!