பட்டாசு ஆலைகளை உடனே திறக்க வேண்டும்.. ஆயிரக்கணக்கில் கூடி போராடும் மக்கள்.. குலுங்கிய விருதுநகர்
தமிழகத்தில் மீண்டும் பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பட்டாசு தொழிலாளர்கள், சங்கங்கள் விருதுநகரில் பெரும் மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
விருதுநகர்: தமிழகத்தில் மீண்டும் பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பட்டாசு தொழிலாளர்கள், சங்கங்கள் விருதுநகரில் பெரும் மறியல் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
கடந்த தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் நிறைய கட்டுப்பாடுகளை விதித்தது. 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது.
அதேபோல் பட்டாசு தயாரிப்பிலும் நிறைய புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. குறிப்பிட்ட சில மூலக்கூறுகளை பயன்படுத்த கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் சிவகாசி தொடங்கி தமிழகம் முழுக்க பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டது.
பெரிய பாதிப்பு
கடந்த 2 மாதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படவே இல்லை. இதனால் 8 லட்சம் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். இது பெரிய பொருளாதார இழப்பை உருவாக்கியது.
போராட்டத்தில் குதித்தனர்
இதன்காரணமாக விருதுநகரில் தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் என பலர் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
எத்தனை பேர்
1000க்கும் அதிகமானோர் போராடி வருகிறார்கள். உடனடியாக ஆலைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சாலை முழுக்க பலர் நின்று கோஷம் எழுப்பி போராட்டம் செய்தனர். இதனால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது.
கோரிக்கை என்ன
பட்டாசு உற்பத்தியாளர்கள் மறியல் போராட்டம் காரணமாக அங்கு பெரிய அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பதற்றம் அதிகம் ஆகவே பட்டாசு தொழிலாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். பட்டாசு ஆலைகளை உடனே திறக்க வேண்டும், பட்டாசு உற்பத்திக்கான கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும், போதுமான இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்று பல கோரிக்கைகளை வைத்துள்ளனர்.