கொலை மிரட்டல்.. பயமா இருக்கு.. அதிமுக நிர்வாகி மீது புகார் கொடுத்த திமுக எம்.எல்.ஏ.. அதிரடி ஆக்ஷன்!
திமுக எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி மீது எம்.எல்.ஏ புகார் அளித்தார்.
விருதுநகர் : ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியனுக்கு, கட்சி மேடையில் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நகர செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் அதிமுக நகர செயலாளர் வக்கீல் முருகேசன் சமீபத்தில், ராஜபாளையம் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனை மேடையில் கடுமையாகத் தாக்கிப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ தங்கபாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக நகர செயலாளர் மீது சேத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
திடீரென உதயநிதி கான்வாய்க்குள் புகுந்த வண்டி.. டக்கென சுதாரித்த ஓட்டுநர்..பெரும் விபத்து தவிர்ப்பு!
திமுக எம்.எல்.ஏ புகார்
திமுக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் அளித்துள்ள புகாரில், கடந்த ஜனவரி 21ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய ராஜபாளையம் அதிமுக நகர செயலாளர் வக்கீல் முருகேசன், வன்முறையைத் தூண்டும் விதத்திலும், அசிங்கமான வார்த்தைகளாலும், என்னை வெட்டிக் கொல்லப் போவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
செருப்பால் அடிப்பார்கள்
மேலும், "நானும் வக்கீல் முருகேசனும் ஒரே சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். தொகுதி வளர்ச்சிக்காக நடைபெற்று வரும் ராஜபாளையம் பேருந்து நிலையப் பணியைக் கொச்சைப்படுத்தி, பஸ் ஸ்டாண்ட் ரெண்டு பக்கமும் அடைத்துவிட்டதால் மக்கள் பிரதிநிதியாகிய என்னை மக்கள் செருப்பால் அடிப்பார்கள் என்று கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார்.
உயிருக்கு அச்சுறுத்தல்
'உன் ஏரியாக்குள்ள வந்து கூட்டம் போடுறேன்டா... வந்து பாருடா...' என்று ஒருமையில் பேசி மக்கள் பிரதிநிடியாகிய எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வக்கீல் முருகேசன் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என பயமாக உள்ளது. அவருடைய மேடைப் பேச்சால் எனக்கு அவமானமும் உயிர் பயமும் ஏற்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
வக்கீல் முருகேசன் பேசிய வீடியோ பதிவை பார்த்துவிட்டுத்தான், இந்தப் புகாரை அளித்திருக்கிறேன்" என தனது புகாரில் தெரிவித்துள்ளார். தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. அளித்த புகாரின் பேரில் வக்கீல் முருகேசன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.