திமுக, அதிமுக கடும் மோதல் போர்க்களமான விருதுநகர்... தடியடி நடத்தி கைது செய்த போலீஸ்
விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினரும் திமுகவினரும் கடுமையாக மோதிக்கொண்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
விருதுநகர்: திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பற்றி தரக்குறைவாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திமுகவினர் உருவபொம்மையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினரும் திமுகவினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் விருதுநகரே போர்க்களமானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்து கைது செய்தனர்.
Recommended Video
கடந்த தினங்களுக்கு முன்பு சேலத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, இந்திய பட்ஜெட்டை மிஞ்சும் வகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டு ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடி முறைகேடு செய்த கட்சிதான் திமுக. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியே, கூட்டணிக் கட்சியான திமுக மீது 2ஜி ஸ்பெக்டர் ஊழல் வழக்கைப் பதிவு செய்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
முதல்வரின் ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசிய திமுக எம்.பி ஆ.ராசா,ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை. ஆனால் 2ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் நாளையோ, நாளை மறுநாளோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க நான் தயார். அவர் தயாரா? எனக் கேள்வி எழுப்பினார்.
நான் தயார் நீங்க தயாரா?
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்வரை ஏன் கூப்பிடுகிறாய்? அவர் எதற்கு வரவேண்டும் நான் வருகிறேன். ராசாவுடன் ஆனாலும் சரி, ஸ்டாலினுடன் ஆனாலும் சரி. ஊழல் செய்தாயா இல்லையா? சர்க்காரியா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட கட்சி தானே திமுக என காட்டமாக பேசினார். ஸ்டாலினை ஒருமையில் பேசி திட்டினார் ராஜேந்திர பாலாஜி.
கொந்தளித்த திமுக
அமைச்சரின் இந்த பதில் திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜபாளையத்தில் தகராறு
ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை அதிமுகவினர் தீயிட்டு எரித்தனர். அப்போது திமுகவினருக்கு அதிமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
விருதுநகரில் தடியடி
விருதுநகரில் அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க திமுகவினர் முயன்றனர். அப்போது அதிமுகவினரும் அங்கு குவிந்தனர். இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் சுற்றி வளைத்து உருவ பொம்மையைப் பறித்துச் சென்றனர். தொடர்ந்து திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. கற்களை வீசி தாக்கினர். அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் உருவப்படங்களை திமுகவினர் தீயிட்டு எரித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.