திமுகவினர் கைகள் புளியங்கா பறிக்காது... ராஜேந்திரபாலாஜிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர். பதிலடி
விருதுநகர்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரின் சித்து விளையாட்டுக்களை பார்த்துக்கொண்டு திமுகவினர் கைகள் புளியங்கா பறிக்காது என முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைத்து சித்து விளையாட்டுகளையும் நடத்துவேன் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேயர் தேர்தல்... ஆளுங்கட்சியை எதிர்க்க உதயநிதியே சரியான நபர்... நிர்வாகிகள் வலியுறுத்தல்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். பதிலடி
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது என்றும், திமுகவினர் சட்டையை பிடிப்பேன், சித்து விளையாட்டைக் காட்டுவேன் என்றெல்லாம் பேசுவது அவர் வகிக்கும் அமைச்சர் பொறுப்புக்கு சற்றும் அழகில்லை எனவும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
பொறுப்பு தேவை
தமிழகத்தில் 6 கோடி பேர் இருந்தாலும் அதில் 32 பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைக்கிறது, அப்போது அந்தப் பதவியில் இருப்பவர்கள் எவ்வளவு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பொறுப்பற்ற முறையில் பேசும் இது போன்ற கருத்துக்கள் அபத்தமானது எனவும் தெரிவித்தார்.
திமுகவின் சக்தி
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதை போல், அவர்களது சித்து விளையாட்டுக்களை எல்லாம் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் எனவும், திமுகவினர் கைகள் புளியங்கா பறித்துக்கொண்டு இருக்காது என்பதை கூற விரும்புவதாகவும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்தெரிவித்தார்.
நல்ல ஜோதிடர்
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற திமுக ராஜதந்திரத்துடன் செயல்பட்டு வருவதாகவும், யாரை எங்கு நிறுத்தினால் வெற்றி வசப்படும் என்பதை தலைமை அறிந்து வைத்துள்ளதாகவும் கூறினார். மேலும், ராஜேந்திரபாலாஜியை அமைச்சர் என்று தான் இதுவரை தாம் நினைத்ததாகவும் இப்போது திமுகவின் எதிர்காலம் பற்றியெல்லாம் அவர் பேசுவதை பார்த்தால் ஜோதிடர் ஆகிவிட்டாரோ என தமக்கு தோன்றுவதாக கிண்டலடித்தார்.