'கத்தி' பட வசனம் பேசி... வாக்கு கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
விருதுநகர்: கண்ணுக்கே தெரியாத காற்றிலே ஊழல் செய்தவர்கள் திமுகவினர் என கத்தி திரைப்பட வசனத்தை குறிப்பிட்டு முதல்வர் பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந்தேதி நடக்க உள்ளது. இதனால் தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் விறுவிறுப்பாக மாறியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகரை ஆதரித்து திருப்பரங்குன்றத்தில் இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஸ்டாலின் நாக்கில் சனி இருக்குமோ.. இல்லாட்டி விஷமா.. டாக்டர் ராமதாஸ் சரமாரி தாக்கு
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு பிரச்சாரக்கூட்டத்தில் கற்பனை கதைகளை பேசி வருகிறார். வாக்குகளை பெறுவதற்காக வெளியாகி உள்ள திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று தேர்தல் அறிக்கை. பாஜக உடன் கூட்டணி வைத்த போது அந்த கட்சி மதவாத கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா? மத்தியில் நிலையான ஆட்சி அமைய பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவு தாருங்கள். கண்ணுக்கே தெரியாத காற்றிலே ஊழல் செய்தவர்கள் திமுகவினர் தான்" இவ்வாறு பேசினார்.
முன்னதாக சிவகாசியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "பட்டாசு உற்பத்தியாளர்கள் நேற்று இரவு என்னை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கூறினார்கள். நான் அவர்களிடம் பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினேன். பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழ்நாடு அரசு சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" என்றார்.