குடும்பத் தகராறு.. 1 வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!
விருதுநகர்: குடும்பத் தகராறில் தனது ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பது மகன் மாரிக்கண்ணன் (29) இவர் தனியார் கார், வேன்களுக்கு டிரைவராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு இவரது அத்தை மகள் சங்கரேஸ்வரியை (23) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு மவுனி கணேஷ் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது
இந்நிலையில் திருமணமான நாள் முதலே மாரிக்கண்ணனுக்கும் சங்கரேஸ்வரிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தற்போது 144 தடை உத்தரவின் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் குடும்பத் தகராறு அதிகமானது.
இதன் காரணமாக இன்று தனது 1 வயது குழந்தை மவுனிகணேஷ்க்கு விஷம் கொடுத்து விட்டு தானும் அதே விஷத்தை அருந்தி தற்கொலை செய்துள்ளார் மாரிக்கண்ணன். இருவரும் விஷம் அருந்தியதை அறிந்த உறவினர்கள் உடனடியாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த இருக்கன்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.