2வது இன்னிங்ஸ் கலகலக்குமா?.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்!
காமராஜருக்கு மணி மண்டபம் எழுப்பிய சரத்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது
Recommended Video
விருதுநகர்: கர்ம வீரர் காமராஜர் மணிமண்டப விழாவில், ஒட்டுமொத்த நாடார் இனத்தையும் தன்பால் ஈர்த்து தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளார் சரத்குமார்!
எத்தனை பேருக்கு இது நினைவிருக்கும் என்று தெரியவில்லை.. 2007ம் ஆண்டு, செப்டம்பர் 1-ம் தேதி.. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை துவக்கியபோது சரத்குமார் பேசியது இவை:
"காமராஜர் நாடார் இனத்தில் பிறந்தார் என்பது பெருமை அளிக்கும் விஷயமாகும். நான் நாடார் சமுதாயத்தில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன். அதற்காக இந்தக் கட்சி நாடார் கட்சியாக இருக்காது. அனைத்து சமூகத்தினரும் இதில் இடம் பெற்றிருப்பார்கள்" என்றார்.
என்னை நீக்குமாறு காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்ததே திமுகதான்.. கராத்தே தியாகராஜன்
கட்சி கொடி
கூடவே தன் கட்சி கொடியின் நிறத்துக்கு, "மஞ்சள் மங்களகரம், சிவப்பு புரட்சி, நட்சத்திரம் தொலைநோக்குப் பார்வையைக் குறிக்கும்" என்று ஒரு விளக்கமும் கொடுத்தார். இதையெல்லாம் சரத்குமார் சொல்லி 12 வருஷம் ஆகிறது என்றாலும், நாடார் சமுதாயத்தை தாண்டி அவரது கட்சியில் எத்தனை பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது உறுதியாக தெரியவில்லை. அதேபோல, இவர் போட்டியிட தேர்ந்தெடுக்கும் தொகுதியும் தூத்துக்குடி உள்ளிட்ட நாடார் இன மக்கள் நிறைந்த பகுதியாகதான் கடந்த காலங்களில் நமக்கு அறிமுகம் ஆகி உள்ளது.
மணிமண்டபம்
இப்போது விஷயம் என்னவென்றால், நேற்று காமராஜர் பிறந்தநாளையொட்டி விருதுநகர் அருகே உள்ள கள்ளிக்குடி பகுதியில் மணிமண்டபம் திறக்கப்பட்டது. காமராஜர் புகழ், அவரது சாதனைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் இதை கட்டியது சரத்குமார்தான். இந்த நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் ஏற்றினார் சரத்குமார்.
பாராட்டு
"சமத்துவம்" என்ற பெயரில் வெறும் சாதீய ஓட்டுக்களை சரத்குமார் இதுவரை பெற்றிருப்பினும், காமராஜருக்காக முன்னெடுத்து செய்துள்ள இந்த காரியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. அதற்காக எதிர்தரப்பினர் என்பதைகூட மறந்து முக ஸ்டாலினும் நேற்று சரத்குமாருக்கு வாழ்த்து சொல்லி இருந்தார். அந்த அளவுக்கு வரலாற்றில் மறக்க முடியாத மாமனிதர் காமராஜர்.
தென்காசி
ஆனால், சமுதாய மக்களை மட்டுமே களம் இறங்கி இத்தனை வருடம் அரசியல் நடத்தி வருகிறார் சரத்குமார். அவர் சார்ந்த சமுதாய மக்களுக்கும்,அப்போது பொறுப்பில் இருந்தபோது தென்காசி மக்களுக்கும் என்னென்ன நலத்திட்டங்கள் செய்துள்ளார் என்பது பெரும்பாலும் வெளியே தெரியவில்லை.
மாற்றம்?
என்றாலும், சரத்குமாரின் பின்னால், ஒரு சமுதாய கூட்டமே துணை நிற்கிறது என்பது மட்டும் நேற்று புலப்பட்டது. இதுவரை துணை நின்ற நாடார் சமுதாயம் இனியும் சரத்குமாருக்காக திரண்டு வருவார்களா, அதன்மூலம் மாற்றம் ஏதேனும் தமிழகத்தில் நிகழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சட்டசபை
நேற்று சரத்குமார் கூட்டிய தலைவர்கள் கூட்டத்தைப் பார்த்தால் வரும் சட்டசபைத் தேர்தலில் தனி தாக்கத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டுள்ளாரோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. சரத்குமாரின் 2வது இன்னிங்ஸை வரும் சட்டசபைத் தேர்தலில் பார்க்கலாமா.. பொறுத்திருப்போம்.