விருதுநகரில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபம்.. திறந்து வைத்தார் முதல்வர்
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா இன்று மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி விருதுநகர் கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபம் இன்று திறக்கப்பட்டுள்ளது.
கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை சென்னை தலைமைச்செயலகத்திலிருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் காமராஜர் நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் நினைவாக, காமராஜர் கல்வி, மருத்துவ அறக்கட்டளை அறங்காவலரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தலைமையில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மணிமண்டபமானது ரூ.25 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பளவில் விருதுநகருக்கு அருகேயுள்ள கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
வேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்
அதே போன்று காமராஜர் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமக தலைவர் சரத்குமார், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கள்ளிக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அறிவியல் பூங்கா, காமராஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் மாதிரி நினைவு இல்லம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.