சத்தியமா தண்ணி அடிக்க மாட்டோம்.. சிலையை தொட்டோம்.. சுத்தமாயிட்டோம்.. மாணவர்கள் கண்ணீர்
காமராஜர் நினைவிடத்தை சுத்தப்படுத்திய கல்லூரி மாணவர்கள்
விருதுநகர்: "இனி சத்தியமா தண்ணி அடிக்க மாட்டோம்.. காமராஜர் சிலையை தொட்டோம்.. நாங்க சுத்தமாயிட்டோம்" என்று போதை மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் காலேஜில் 3-ம் வருடம் படிக்கும் மாணவர்கள் 8 பேரை நிர்வாகம் படிப்பதற்கு உள்ளே அனுமதிக்கவில்லை. காரணம், இவர்கள் நண்பனின் பிறந்த நாளை முன்னிட்டு தண்ணி அடித்துவிட்டு, கிளாசுக்கு போனதால்தான்.
டி.சி. கொடுத்துவிட்டு, வேறு காலேஜில்போய் சேர்ந்து கொள்ளுமாறு நிர்வாகம் சொன்னது. இதனால் அதிர்ந்த மாணவர்கள், "நாங்கள் பீஸ் கட்டி படிக்கிறோம், எங்களை அதே காலேஜில்தான் படிக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என மதுரை ஐகோர்ட்டில் இந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
தண்டனை
இதனை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். மனுதாரர்கள் தங்களின் தவறை ஏற்கெனவே உணர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கல்லூரியில் ஒழுங்காக இருப்போம் என்று உறுதியளித்துள்ளனர்.
உதவி
அதனால், சுதந்திர தினத்தன்று விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த வீட்டினை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும். காமராஜர் இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
ஸ்டூல்
நீதிபதியின் இந்த நூதன உத்தரவை அனைத்து தரப்பினரும் பாராட்டவே செய்தனர். இதையடுத்து நேற்று, அந்த 8 மாணவர்களும் விருதுநகரிலுள்ள காமராஜர் இல்லத்துக்கு சென்றனர். ஆளுக்கு ஒரு துணியை எடுத்து அந்த அறைகளை சுத்தம் செய்தனர். ஒருவர் ஸ்டூல் போட்டு ஏறி நின்றும், இன்னொருவர் அங்கிருந்த காமராஜர் சிலைகளை சுத்தம் செய்தவாறும் சுறுசுறுப்பாக இருந்தனர். நாள் முழுக்க இவர்கள் சுத்தம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுத்தி கொண்டதுடன், அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கும் உதவிகளை செய்தனர்.
தண்டனை
சாயங்காலம் சுத்தப்படுத்தும் வேலைகளை முடித்த மாணவர்கள் சொன்னதாவது: "கோர்ட் எங்களுக்கு அளித்த உத்தரவை தண்டனையாக நாங்கள் பார்க்கவில்லை.. எங்களை திருத்திக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக நினைத்தோம். காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்தபோதே எங்கள் மனசும் சுத்தமாகிவிட்டது. அதுவும் காமராஜர் சிலையை தொட்டு துடைச்சபோதே உடல் சிலிர்த்துவிட்டது. இது எங்கள் வாழ்க்கையின் ஒரு திருப்புமுனை. சத்தியமாக இனி குடிக்க மாட்டோம்" என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.