சோடா பாட்டில் ஜீயருடன் வைகோவின் தளபதி திடீர் சந்திப்பு... என்னவா இருக்கும்?
ஶ்ரீவில்லிப்புத்தூர்: ஆண்டாள் விவகாரத்தில் சோடா பாட்டில் வீசுவோம் என மிரட்டல் விடுத்த சர்ச்சைக்குரிய ஶ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை மதிமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழகக் குமார் இன்று திடீரென சந்தித்து ஆசி பெற்றது புரியாத புதிராக உள்ளது.
ஆண்டாள் குறித்து இழிவாக பேசினார் கவிஞர் வைரமுத்து என இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டின. ஆனால் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் தமது கருத்துகளை முன்வைத்தேன் என வைகோ விளக்கம் அளித்தார்.
இதை ஏற்காமல் வைகோவை இழிசொற்களால் இந்துத்துவா அமைப்பினர் வசைபாடினர். அதுவும் ஶ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ஜீயர், நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் திடீரென குறுகிய கால உண்ணாவிரதம் இருந்தார். இந்த விவகாரத்தில் வைரமுத்துவுக்கு முழுமையாக வைகோ ஆதரவு தெரிவித்திருந்தார். இச்சூழலில் வைகோவுக்கு மிக நெருக்கமானவரும் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான கழகக் குமார் இன்று ஶ்ரீவில்லிப்புத்தூரில் சடகோப ஜீயரிடம் ஆசிபெற்றேன் என ஒரு படத்தை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய சடகோப ஜீயரை சந்தித்து ஆசி பெற்றதாக வைகோவின் தளபதியாக வலம் வரும் கழகக் குமார் பதிவிட்டிருப்பதன் பின்னால் என்ன அரசியல் இருக்கிறதோ?