"ஈரம் வேண்டும்.. இரக்கம் வேண்டும்.. மனிதாபிமானம் இல்லாத மனிதர்" ஸ்டாலினை சரமாரியாக விளாசிய முதல்வர்
விருதுநகர்: கொரோனா நோய் பரவல் கட்டுபாடு தொடர்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நடந்த ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்றுவிட்டு, விருதுநகர் வருகை தந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
பின்னர் நிருபர்களைச் சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறியதாவது: சமீபத்தில், எங்களுடைய வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா நோய் பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரணமடைந்தார்.
எனது தாயார் இறப்பு பற்றி விசாரிப்பதற்கு ஊருக்கு வர இருந்தார் துரைக்கண்ணு. வரும் வழியில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், விழுப்புரம் மருத்துவமனையிலும் பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கொரோனா வைரஸ் காரணமாக துறைகளில் நுரையீரலில் 40% அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. படிப்படியாக 90% வரை நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் இதுகுறித்து அவதூறாக செய்தி பரப்பி வருகிறார். வேளாண்மைத்துறை அமைச்சர் மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்கட்சி தலைவர் பேசியுள்ளார். இதில் என்ன மர்மம் இருக்கிறது என்பதை அவர் கூற வேண்டும்.
இடைத் தேர்தலோ.. பொதுத் தேர்தலோ.. மொத்த இந்தியாவிலும் மோசமாக தோற்றது காங்கிரஸ்தான்! காரணம் இதுதான்
அவதூறு பிரச்சாரம்
அதே காவேரி மருத்துவமனையில்தான், முன்னாள் முதல்வரும், திமுக தலைவர் கருணாநிதியும் சிகிச்சை பெற்றார். அப்படியானால் சிகிச்சை அளித்த மருத்துவர்களை ஸ்டாலின் குறை சொல்கிறாரா? யாரை குறை சொல்கிறார்? கொரோனா வார்டுக்குள் வேறு யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டும்தான் சிகிச்சை அளிப்பார்கள். அப்படி இருக்கும்போது பொய்யான அவதூறுப் பிரசாரத்தை ஸ்டாலின் பரப்பி வருகிறார்.
கீழ்த்தர அரசியல்
மருத்துவர் சரியாக வைத்தியம் பார்க்கவில்லையா? நர்சுகள் சரியாக கவனிக்கவில்லை என்று சொல்கிறீர்களா? துரைக்கண்ணு குடும்பத்தை சார்ந்தவர்கள் கூட உள்ளே சென்று பார்க்க முடியாத நிலை இருந்தது. நான் கூட மருத்துவமனை சென்றபோது அவர் சிகிச்சை பெறும் காட்சியை வீடியோவில்தான் பார்க்க முடிந்தது. இப்படி இருக்கும்போது கீழ்தரமான அரசியல் செய்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.
ஜீரணிக்க முடியாத ஸ்டாலின்
தமிழக அரசு மூன்று மாதத்தில் கலைந்துவிடும், ஒரு வருடத்தில் ஆட்சி போய்விடும் என்று பேசிக் கொண்டிருந்தார். இடைத்தேர்தல்களில் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தொடர்ந்தது. அவரது கனவு கலைந்து போனது. எனவே அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தவறான கருத்தை சொல்லி பரப்பி மலிவான அரசியல் செய்வது எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்.
கருணாநிதி சிகிச்சையில் தவறா?
உங்களது தந்தைக்கும் அதே மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்கிறார்கள். அதே மருத்துவமனைதான் தினமும் அறிக்கை அளித்தது. அப்படியானால் நீங்கள் ஏதோ தவறு செய்து இருப்பீர்களோ என்று எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது. மருத்துவர்களும் செவிலியர்களும் மிகச் சிறப்பாக சிகிச்சை அளிக்கிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் கொச்சைப்படுத்தி பேசுவது சரியல்ல.
ஈரம், இரக்கம்
மனிதாபிமானம் இல்லாத மனிதர் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் தான். திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். நான் உடனடியாக சுகாதாரத் துறை அமைச்சருக்கு தகவல் கொடுத்து உரிய சிகிச்சைகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ எங்களுக்கு எல்லா உயிரும் முக்கியம். அப்படி இருக்கும்போது இப்படியான குற்றச்சாட்டுகள் மிகவும் வேதனையாக இருக்கிறது. மனதில் கொஞ்சமாவது ஈரம் இருக்க வேண்டும். இரக்கம் இருக்க வேண்டும். ஆனால் பதவி மட்டும்தான் ஸ்டாலினுக்கு முக்கியத்துவமாக இருக்கிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக தெரிவித்தார்.