மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது.. அமைச்சர் அசால்ட் பேச்சு!
விருதுநகர்: மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால் தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடிக்கு ஆதரவாகத்தான் பேசி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோடிதான் எங்களின் டாடி என்றார். இது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
இதனை தொடர்ந்து, டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டப் பிறகு கூட்டம் ஒன்றில் பேசிய ராஜேந்திர பாலாஜி, நாம யாருக்கும பயப்பட வேண்டாம், எல்லாம் மேல இருக்கவன் பாத்துக்குவான் என்றார்.
டிச.31-ல் பாமக பொதுக்குழு... செயல் தலைவர் ஆகிறாரா அன்புமணி?
மோடிக்கு ஆதரவு
அவர் பிரதமர் மோடியைதான் குறிப்பிட்டு பேசுகிறார் என அந்த விவகாரமும் சர்ச்சையானது. ஆனாலும் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவே பேசி வருகிறார் ராஜேந்திர பாலாஜி.
வாக்கு சேகரிப்பு
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி மீண்டும் பிரதமர் மோடிக்கு புகழ் பத்திரம் வாசித்திருக்கிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
மோடி என்ற வீரன்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது என்றார்.
மோடி இரும்பு மனிதர்
பிரதமர் மோடி போன்ற இரும்பு மனிதர் இல்லை என்றால் வன்முறையால் இந்தியா துண்டாடப்பட்டிருக்கும். பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சிப்பாதையில் நாடு செல்வதை தடுக்கவே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதேதான் இப்போதும்
மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதுதான் தி.மு.க.வின் வழக்கமான செயல் என்றும் அதைத்தான் தற்போது குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகவும் திமுக செய்து வருவதாக ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார்.
கைவிட வேண்டும்
ஸ்டாலின் நலத்திட்டங்களை ஒரு போதும் ஆதரிப்பதில்லை என்றும் எதிர்ப்பவராகவே உள்ளார் என்றும் அவர் கூறினார். மேலும், மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை திமுக கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மோடிக்கு புகழாரம்
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரதமர் மோடியை இரும்பு மனிதர், வீரன் என புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.