அதிமுகவில் 'அந்த நிலை வராது' உதயநிதிக்கு ராஜேந்திர பாலாஜி கடும் பதிலடி
விருதுநகர்: உதயநிதி ஸ்டாலின்தான் சினிமாவில் நடித்துவிட்டு நேரிடையாக திமுகவிற்கு வந்து ஸ்டாலினின் தோளில் அமர்ந்தவர் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுக பழம்பெரும் தலைவர்கள் எல்லாம் உள்ளனர், அவர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலினிடம் கையை கட்டி நிற்கின்றனர் என்றும் ராஜேந்திர பாலாஜி விமர்சித்தார்.
அருப்புக்கோட்டை அருகே செந்நெல்குடியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்( ரூ.444.71 கோடி மதிப்பீட்டில்) சார்பில், தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்டு சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சி பகுதிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பூமிபூஜை செய்து, திட்டப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்.
உதயநிதி
பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், முதல்வர் எடப்பாடி படிப்படியாக வளர்ந்தவர் இல்லை ஊர்ந்து ஊர்ந்து வந்தவர் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் அதற்கு உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு ராஜேந்திர பாலாஜி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, முதல்வர் படிப்படியாக உயர்ந்தவர்தான்.
கைகட்டி நிற்கிறார்கள்
உதயநிதிதான் சினிமாவில் நடித்துவிட்டு நேரிடையாக திமுகவிற்கு வந்து ஸ்டாலினின் தோளில் அமர்ந்தவர், திமுக பழம்பெரும் தலைவர்கள் எல்லாம் உள்ளனர், அவர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலினிடம் கையை கட்டி நிற்கின்றனர், அந்த நிலைமை அதிமுகவிற்கு வராது என்றார்.
கம்பு சுற்ற வேண்டும்.
ரஜினி அரசியல் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ரஜினி முதலில் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் அதை பற்றி பேசலாம். சிவகாசியில் யார் நின்றாலும் கவலை இல்லை, போட்டின்னு வந்தா களத்துல கம்பு சுற்றித்தான் ஆகனும் என்று நெத்தியடியாக ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
எடப்பாடியார்
முன்னதாக திருவாரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் "முதல்வர் எடப்பாடி பழனிசாமி படிப்படியாக வளர்ந்தவர் அல்ல; ஊர்ந்து ஊர்ந்து வளர்ந்தவர்" என்று பேசினார்.. முதல்வர் பழனிசாமியை பல மேடைகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இவ்வாறான வார்த்தைகளை கொண்டுதான் விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.