காவிரி டெல்டாவே கலங்கி கிடக்கிறது.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கஜா.. கூஜா என ஜோக்கடிக்கிறார்!
கஜா புயல் கூஜா புயல் ஆகிவிட்டது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Recommended Video
விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதை பேசினாலும் அது வைரல்தான்! சில சமயம் சலசலப்பு... சில சமயம் விமர்சனம்.. சில சமயம் கலகலப்பு.. என தெறிக்க விட்டுக் கொண்டு இருக்கிறார்.
இப்படித்தான் நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் கலந்து அமைச்சர் பேசியபோது அமைச்சர் கூறியதாவது: மக்களுக்கு இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.
பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பிரச்னைகள் ஏற்பட்ட காரணமாக, ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து நமது முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் பட்டாசுத் தொழிலை காக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடும்.
பீதி கிளப்பிய கஜா
'கஜா புயல் பற்றி பீதி எழுந்தது. அந்த புயல் தமிழகத்தை கடுமையாக தாக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் தமிழக அரசு மிக கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டது. தமிழக அரசின் பேரிடர் மீட்புக்குழு மூலமாக எடுத்த சிறப்பான நடவடிக்கை காரணமாக பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கஜா - கூஜா ஆகிவிட்டது
அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, மின்னல் வேகத்தில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதனால் 'கஜா புயல் கூஜா புயல் ஆகிவிட்டது' என்றார். அமைச்சர் இவ்வாறு சொன்னதும் மேடையில் இருந்தவர்கள் உட்பட எல்லோருமே சிரித்து விட்டார்கள்.
குடிநீர் பிரச்சனை
இன்னொரு அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில், புயல்கள் நல்லதுதான். அப்போதுதான் நல்ல மழை பெய்து குடிநீர்ப் பிரச்சினை தீரும் என்று கூறியுள்ளார். இதுவும் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
நல்லாவா இருக்கு?
காவிரி டெல்டாவே முடங்கிப் போய், மக்கள் பெரும் வேதனையில் இருக்கும்போது பொறுப்பான அமைச்சர்கள் இப்படி ஜோக்கடித்துக் கொண்டிருப்பது நல்லாவா இருக்கு!