எனக்கு ரொம்ப சங்கடமா இருக்குங்க.. என்னப்பா பண்றீங்க நீங்கல்லாம்.. ராஜேந்திர பாலாஜி விசனம்!
விருதுநகர்: எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. ரஜினி ரசிகர்கள் எல்லாம் என்னப்பா செய்றீங்க என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகரில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக உதவி ஆணையர் மற்றும் உதவி தணிக்கை அலுவலர் அலுவலகக் கட்டிடங்கள் கட்டுவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறுகையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி பிழைப்பு நடத்தும் இயக்கமாக திராவிடர் கழகம் உள்ளது. ரஜினி ரசிகர்கள் இந்த பிரச்சினையில் பொறுமைக் காப்பது எனக்கு சங்கடமாக உள்ளது. பெரியாரை அவமரியாதையாக ரஜினி பேசவில்லை. ரஜினியை மிரட்டி பார்க்கிறார்களா திகவினர்? ஆன்மீகவாதிகளை பழிதீர்க்கும் செயலை திகவினர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.
பால் விலையைப் பத்தி எந்தக் கட்சியாச்சும் கவலைப்பட்டுச்சா.. அதை விட்டுட்டு ரஜினி பின்னாடியே திரிங்க!
நல்ல மனிதர்
ரஜினிகாந்த் நியாயவாதி. நல்ல மனிதர். மனதில் பட்டதை பேசுபவர் ரஜினிகாந்த். ரஜினி பேசிய நியாயத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். திமுகவின் முகமூடியாகத்தான் திக திகழ்கிறது. ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அவர் தமிழச்சியான லதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கோயில்
ஆர் எஸ் எஸ் என்ன பயங்கரவாதிகளா? அவர்கள் எங்கு குண்டு வைத்தார்கள், மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை கொலையாளியாக தான் பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவராக பார்க்க முடியாது. கோவிலுக்கு சாமி கும்பிட சென்றவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இல்லை.
பெருந்தன்மை
ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் பொதுநலவாதிகள், தேசியவாதிகள். அவர்கள் வன்முறையை வெறுக்க கூடியவர்கள். முதலமைச்சர் பதவி பற்றி எடப்பாடி பேசியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. பெரியாரைப் போன்றவர்கள் இல்லையென்றால் என்னை போன்றவர்கள் அமைச்சராக இருக்க முடியாது. ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை.
ஆன்மீகம்
ரஜினி ரசிகர்கள் பொறுமையாக உள்ளனர். பொறுமையாக இருக்கும் இந்துக்களை தி.க. மற்றும் தி.மு.கவினர் இளிச்சவாயன்களாக பார்க்கிறார்களா. நேர்மையாக சமூக சேவை செய்பவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகளே. இந்துக்களை அவமதிப்பதால் 2021 சட்டமன்றத் தேர்தலுடன் திமுகவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும். தமிழகத்தில் விவசாயிகள் பயன் பெறுவதற்காக கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக தனியார் பால் விலை உயர்ந்து உள்ளதாகவும் உயர்வை பொது மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார் ராஜேந்திர பாலாஜி.