அதிமுகவினர் சட்டையை தொட்டால்.. கிழிக்கணும்.. கதவை தட்டினால்.. உடைக்கணும்.. ராஜேந்திர பாலாஜி அதிரடி!
திமுகவினர் சட்டையை கிழிக்க வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: "அதிமுகவின் சட்டையை தொட்டால், நாம் திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும். நம் வீட்டுக் கதவை தட்டினால், திமுகவினர் வீட்டுக் கதவை நாமே உடைத்து நொறுக்க வேண்டும். இது சம்பந்தமாக என்ன பிரச்சனை வந்தாலும் சரி, நானே பார்த்துக்கறேன்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பொதுவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாக பேசக்கூடியவர்... மனசில எதையுமே வெச்சுக்க மாட்டார். பல சமயங்களில் இவரது பேச்சுக்கள் சர்ச்சையானாலும், அவைகள் பெரும்பாலும் வெள்ளந்தியாகவே இருக்கும்.
ஆனால் சில சமயங்களில் அமைச்சர் பேசுவதை எப்படி எடுத்து கொள்வது என்று நமக்கு தெரியாமல் பல நேரம் குழப்பமாகிவிடும். "நீங்கெல்லாம் இப்பதான் ரவுடி.. நாங்க யார் தெரியுமா? பிறவிலேயே ரவுடி.. முதல்வர் கை அசைத்தால் போதும், திமுகவையே அழிச்சிடுவோம்" என்றார்.
அதிமுகவினரை தொட்டால்.. சட்டையை கிழி.. வீட்டை நொறுக்கு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்
பரபரப்பு பேச்சு
ஒரு அமைச்சரா இப்படி பேசுவது என்று மக்கள் அதிர்ச்சியும் வெளிப்படுத்தினர். இந்த நிலையில், திரும்பவும் இப்படி ஒரு பேச்சினை வெளிப்படுத்தி உள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுகவின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது வழக்கம்போல பரபரப்பை கிளப்பி வருகிறது.
சண்டை வரும்
அப்போது அவர் சொன்னதாவது: "அதிமுகவை விட்டு பிரிந்து போனவர்கள் இப்போது இணைந்துள்ளனர். சகோதர சண்டை எங்களுக்குள் நடக்கும். மொத்தம் எங்க கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அதனால் உட்கட்சி சண்டை இருக்கத்தான் செய்யும். ஆனா, அதிமுக மட்டும்தான் ஆள வேண்டும்.
சீட் தர முடியாது
இப்போது உள்ளாட்சி தேர்தல் சம்பந்தப்பட்ட வேலை நடந்து வருகிறது. வசதி வாய்ப்பில்லாதவங்க, வயசானவங்களுக்கு எல்லாம் சீட் தர முடியாது. இது கம்ப்யூட்டர் காலம்.. இளைஞர்களை தேர்வு செய்து சீட்டு கொடுங்க.. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுகவின் அத்தனை வேட்பாளர்களும் வெற்றி பெற எல்லா முயற்சி, பணிகளையும் நான் செய்வேன்.
சட்டை கிழிய வேண்டும்
தேர்தல் நேரத்தில் அதிமுகவின் சட்டையை தொட்டால், நாம் திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும். நம் வீட்டுக் கதவை அவங்க தட்டினால், திமுகவினர் வீட்டுக் கதவை நாமே உடைத்து நொறுக்க வேண்டும். இது சம்பந்தமாக என்ன பிரச்சனை வந்தாலும் சரி, முழுக்க முழுக்க உங்களுக்கு நான் பக்கபலமா இருப்பேன். என்னுடைய 16 வயசுல இருந்து கோர்ட், கேஸ்களை பார்த்து வருகிறேன்.. அதை பத்தி எனக்கு கவலை இல்லை.. எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆன்மாதான் என்னை வழி நடத்துகிறது" என்றார்.