அண்ணா முதல்வராக எம்.ஜி.ஆர். தான் காரணம்... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு
விருதுநகர்: அண்ணா முதலமைச்சராக எம்.ஜி.ஆர். தான் காரணம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழாவில் பேசிய அவர் இதனை கூறினார்.
எம்.ஜி.ஆருக்கே தலைவராக திகழ்ந்த அண்ணாவை பற்றி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இப்படி பேசியிருப்பதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சியை பார்த்து மற்ற மாநிலங்கள் பொறாமைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எஸ்.ஐ. வில்சன் கொலையாளிகளுக்கு சிம்கார்டு வழங்கிய வழக்கு- என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்
பொதுக்கூட்டம்
தமிழகம் முழுவதும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். மற்ற மாவட்ட தலைநகரங்களில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
அண்ணா முதல்வர்
எம்.ஜி.ஆர். என்ற இதயதெய்வத்தை அருகில் வைத்துக்கொண்டதால் தான் அண்ணாவால் முதலமைச்சராக ஆக முடிந்தது என்றும், அண்ணாவையே நாட்டிற்கு அடையாளம் காட்டியவர் எம்.ஜி.ஆர். எனவும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இழிவு
எம்.ஜி.ஆருக்கே தலைவராக இருந்த அண்ணாவை, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இழிவுப்படுத்தி பேசியுள்ளதாகவும், வரலாறு தெரியாமல் பிதற்றிவருவதாகவும் திமுகவினர் விமர்சித்துள்ளனர். மேலும், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது தனது உரையை முடிக்கும் நேரத்தில் அண்ணா நாமம் வாழ்க.. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க என்ற முழக்கத்துடன் தான் முடிப்பார். இதிலிருந்தே அண்ணாவுக்கு உரிய மரியாதையை அமைச்சர் தெரிந்துகொண்டிருக்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
பொறாமை
தமிழகத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கும் வழக்கம் அண்மைக்காலமாக தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.