'உயிரிழந்தோர் ஓலம் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது' - கமல்ஹாசன் உருக்கம்
விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
சாத்தூர் அருகே அச்சங்குளம் என்ற கிராமத்தில் செயல்படும் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று (பிப்.12) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளன. மேலும் சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் சந்தன மாரி மற்றும் குத்தகைத்தாரர்களான சக்திவேல், சிவக்குமார், பொன்னுப்பாண்டி, ராஜா, வேல்ராஜ் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பலர் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், "அன்றாடம் செத்துப் பிழைக்கும் தொழிலாகத்தான் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு இருந்தது. இப்போதோ 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலரும் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
தொழிலாளர்களின் பாதுகாப்பை நாம் எப்போது உறுதி செய்யப்போகிறோம்? உயிரிழந்தோர் ஓலம் தேர்தல் பிரச்சார இரைச்சலில் அடங்கி விடக்கூடாது. உடனடி நடவடிக்கைகள் தேவை" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அச்சங்குளம் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.