ஒரு வழியாக நாளை சிறையிலிருந்து வெளிவரும் நிர்மலா தேவி... ஊடகங்களிடம் வாய் திறக்க தடை!
விருதுநகர்: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை சிறையில் இருந்து நாளை மாலை ஜாமீனில் வெளியே வருகிறார்.
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியையாக இருந்த நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நிர்மலாதேவிக்கு உதவியதாக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் நிர்மலா தேவி வழக்கை விருதுநகர் மாவட்ட போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது.
அம்பானி, நீரவ் மோடி, மெகுல் சொக்ஷியின் காவலர்.. நாட்டு மக்களை காவலர் ஆக்க முயற்சிக்கிறார்.. ராகுல்
ஜாமீன் மறுப்பு
பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஜாமீன் தாக்கல் செய்தனர். இதில் முருகன், கருப்பசாமிக்கு மட்டும் சில முறையீட்டுக்கு பின்னர் ஜாமின் கிடைத்தது. ஆனால் பலமுறை தாக்கல் செய்தும் நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி,யாருக்காக அவ்வாறு பேசினார் என்பதை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவில்லை என்று கூறி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது.
நிபந்தனையுடன் ஜாமீன்
கடந்த மார்ச் 12ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன, எஸ்எஸ் சுந்தர் ஆகியோர் அமர்வு, சில நிபந்தனைகளுடன் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டனர். வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்ககூடாது என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
நிர்மலாதேவிக்கு சிக்கல்
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் நிர்மலா தேவி சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்றால் யாராவது ஜாமீன் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் நிர்மலா தேவிக்கு யாரும் ஜாமீன் கொடுக்க முன்வரவில்லை. ஜாமீன் கொடுக்கக்கூடாது என நிர்மலாதேவியின் உறவினர்கள் மிரட்டப்படுவதாகவும் புகார் எழுந்தது.
வருகிறார் நிர்மலா தேவி
இந்நிலையில் நிர்மலாதேவியின் சகோதரர் ரவி, குடும்ப நண்பர் மாயாண்டி ஆகியோர் ஜாமீன்அளிக்க முன்வந்தனர். இவர்களின் உத்தரவாத கடிதங்களை ஏற்று விருதுநகர் மாவட்டமுதலாவது குற்றவியல் நடுவர் நீதிபதி மும்தாஸ், நிர்மலாதேவியை ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து மதுரை சிறையில் இருந்து நாளை மாலை நிர்மலா தேவி ஜாமீனில் வெளிவர உள்ளார்.