நிர்மலா தேவிக்கு சிறையில் பாலியல் தொல்லை.. மிரட்டித் தாக்கினர்.. வக்கீல் பரபர தகவல்
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலா தேவிக்கு சிறையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்படுகிறது. அவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று நிர்மலா தேவியின் வக்கீல் பசும்பொன் பாண்டியன் கோர்ட்டில் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
மாணவிகளை பாலியல் விவகாரத்திற்கு அழைத்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கூட கிடைக்காமல் தடுத்து வருவதாக காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு மீது புகார்கள் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நிர்மலா தேவிக்கு சிறையில் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார் அவரது வக்கீல் பசும்பொன் பாண்டியன். இதுகுறித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது..
நிர்மலாதேவி சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாலியல் தொல்லை உட்பட பல தொல்லைகள் சித்ரவதைகளை நிர்மலா தேவி அனுபவித்து வருகிறார் . அவருக்கு இதுபோல நடப்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடக்கிறது.
கடந்த முறை நிர்மலா தேவி பேட்டி கொடுத்து அழைத்து சென்ற போது காவல்துறையால் கடுமையாக தாக்கபட்டுள்ளார். துப்பாக்கியை கொண்டு சுட்டு விடுவதாக நிர்மலாதேவியை காவல் துறையினர் மிரட்டியுள்ளனர். நிர்மலா தேவி கடுமையான தாக்குதலால் காயமடைந்து உள்ளார். காயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதனால் இன்று அழைத்து நிர்மலா தேவியை காவல் துறையினர் அழைத்து வரவில்லை.
நிர்மலா தேவி குறித்து மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன். நிர்மலா தேவி சித்திரவதை செய்யப்படுவது குறித்து மனித உரிமை ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.