அடங்க மாட்டேங்கறீங்களே.. ஸ்டேஷன் முன் டிக் டாக்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காவல் நிலையம் முன்பு டிக் டாக் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
டிக் டாக் ஆப் மூலம் பாடல்கள் , வசனங்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடித்து வீடியோ வெளியிடுவது கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தது போல பரவி வருகிறது.
இடம் பொருள் கிடையாது. கக்கூஸிலிருந்தும் செய்கிறார்கள், காய்கறி வாங்கப் போகும் இடத்திலும் டிக் டாக்தான். சிலர் அரசு அலுவலங்கள் , காவல் நிலையங்கள் முன்பும் டிக் டாக் செய்து அட்டகாசம் செய்கிறார்கள்.
இதில் காவல் நிலையம் முன்பு செய்வது ச மீப காலமாக வைரலாகி வருகிறது. சுத்த முட்டாள்தனமாக இருக்கும் இந்த டிக் டாக்கில் ஈடுபட்ட பலரை போலீஸார் கைது செய்தாலும் கூட இது தொடர் கதையாகி வருகிறது.
டிக் டாக் ஆப்பில் பல்வேறு ஆபாசங்கள் இடம் பெறுவதால் அதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மணிகண்டன் கூட சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி காவல் நிலையம் முன்பு டிக் டாக் ஆப் மூலம் நடித்து காண்பித்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்ட இனாம் கரிசல்குளம் பகுதியை சார்ந்த சந்திரன் என்ற வாலிபரை வன்னியம்பட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடங்குங்க இளைஞர்களே.. உங்களது நேரத்தையும், சக்தியையும் இப்படி வீணாக்காதீர்கள். நாடும் வீடும் உங்களை நம்பியுள்ளது. அதற்கு பயன்படுத்துங்கள்.