முஸ்லிம்கள் பற்றி தவறான பேச்சு.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு விருதுநகர் போலீஸ் சம்மன்!
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு விருதுநகர் போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது
விருதுநகர்: இஸ்லாமியர்கள் பற்றி தவறாக பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு விருதுநகர் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
40 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் அத்திவரதர் தரிசனம் நடந்து முடிந்த நிலையில், அத்திவரதரை மீண்டும் தண்ணீரில் வைக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கருத்து கூறியிருந்தார். இது சம்பந்தமாக ஜீயர் கடந்த மாதம் 27-ம் தேதி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னதாவது:
"கடந்த காலங்களில் திருடர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு பயந்து அத்திவரதர் சிலையை பூமிக்கடியில் புதைத்தனர். 45 ஆண்டுகள் கழித்து வந்த அத்திவரதரை இப்போது புதைக்க தேவையில்லை. இது தொடர்பாக முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கைவிட போகிறோம்.
அதற்கான முயற்சியை தற்போது எடுத்து வருகிறேன். ஏனென்றால், அத்திரவரதர் மேலே வந்தால்தான் மழை பெய்யும். அதனால் அதை மீண்டும் புதைக்க கூடாது" என்று தெரிவித்திருந்தார். ஜீயரின் இந்த கருத்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
சென்னையில் குறைந்த விலையில் வீடு வாங்க இதுவே சிறந்த நேரம்.. ரியல் எஸ்டேட் நிபுணர்கள்
இதையடுத்து, மத உணர்வை பாதிக்கும் விதமாக ஜீயர் பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் சையது அலி என்பவர் முதல்வரின் தனிப் பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசாருக்கு விருதுநகர் மாவட்ட எஸ்பி ராஜராஜன் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் சடகோப ராமானுஜர் வரும் 22-ம் தேதி விசாரணைக்கு வரும்படி விருதுநகர் போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.