ராஜன் செல்லப்பாவின் கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை உருவாக்கும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஸ்ரீவில்லிப்புதூர்: அதிமுகவில் ஒரே தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது பற்றி கருத்து தெரிவித்தால் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திவிடும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வென்றது. அதே சமயம், 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், 9 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்தநிலையில், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தான் தேவை என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தலில் தினகரன் எனும் மாயை விலகிவிட்டதாக கூறினார். தற்போது அதிமுகவா? திமுகவா? என்ற நிலையே உள்ளதாகவும், அதிமுக கட்டுப்பாட்டோடு செயல்பட்டிருந்தால் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளை இழந்திருக்க மாட்டோம் என கூறினார்.
உட்கட்சி பூசல் இருந்தாலும், 2 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தொடரும் எனக் கூறியுள்ள அவர், அதிமுகவில் இருவர் தலைவராக இருப்பதால் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் இருப்பதாக கூறினார். சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவின் இந்த கருத்து, அக்கட்சிக்குள் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
ராஜன் செல்லப்பா கோபத்தில் நியாயம் இருக்கத்தானே செய்யுது.. !
இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூரில் நடைபெற்ற ஓய்வு பெற்ற காவல்துறை ஊழியர்கள் சங்கத்தின் 32 ம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பாவின் பேச்சு குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் தாம் இதில் கருத்து கூற இயலாது என்றார்.
மேலும், 8 வழி சாலை வேண்டுமா, வேண்டாமா என அங்குள்ள விவசாயிகளை கேட்க வேண்டும். ஸ்டெர்லைட், மீத்தேன் திட்டங்களுக்கு கருத்து கேட்டால் மக்களுக்கு பதில் அரசியல் கட்சியினர் தான் வருகின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
அதே நேரம், இரட்டை தலைமையில் அதிமுக ஆளுமையுடன் உள்ளது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த, இடைத்தேர்தலில் வென்ற 9 எம்எல்ஏக்களை தடுத்ததாக கூறுவது பொய்யானது என்றும் தெரிவித்தார்.