டெல்லி சென்று வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறி.. ராஜபாளையத்தில் சங்கிலி போட்டு ஒரு ஏரியாவுக்கே சீல்
விருதுநகர்: டெல்லி நிஜாமுதின் மார்க்ஸ் பகுதியில் நடந்த மத மாநாட்டிற்கு சென்று திரும்பிய 4 பேருக்கு, கொரோனா அறிகுறி தென்பட்டதால், அவர்கள் வசித்து வரும் ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதிக்கு சீல் வைத்து அப்பகுதி மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருந்து டெல்லி நிஜாமுதின் மார்க்ஸ் பகுதியில் நடைபெற்ற மத மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.
இந்தநிலையில் ராஜபாளையம் சம்மந்தபுரம் மற்றும் சீதக்காதி தெரு பகுதியை சேர்ந்த 4 பேரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
பரிசோதனை அறிக்கை இன்று வெளிவரும் நிலையில், ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியை சீல் வைத்து அந்தப் பகுதியில் இருந்து அப்பகுதி பொதுமக்கள் வெளியே வருவதற்கும், வெளியாட்கள் உள்ளே செல்வதற்கும் தடை விதித்து போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கிலியை போட்டு அந்த பகுதியை வேறு பகுதிகளில் இருந்து பிரித்துள்ளனர். யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற பரபரப்பு அப்பகுதியில் இருக்கிறது.