ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு ஆங்கிலம் பற்றிய விழிப்புணர்வு... ராஜபாளையம் பெண்ணின் அசாத்திய முயற்சி..!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மலர்விழி என்பவர் ஆங்கிலம் பற்றிய விழிப்புணர்வை கிராமப்புற மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார்.
கல்லூரிக் காலம் முடிந்த பின்னரும் ஆங்கிலம் பேசத் தெரியாததால் வாய்ப்பை தவறவிட்டு தவிக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு எளிய நடையில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்கிறார்.
மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய வகையில் செயல்படும் மலர்விழி, தனது ஆசிரியை பணி குறித்து தாமே விவரிக்கிறார்;
ஆங்கில வழிக் கல்வி
எனது குடும்பம் எளிய பின்னணி கொண்டது. அப்பா தொலைக்காட்சி மெக்கானிக்காக இருந்தார். அப்பாவுக்கு குறைவான வருமானம் கிடைத்தாலும் கூட, தனது கஷ்டத்தை பொருட்படுத்தாமல் அப்போதே என்னை மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்க வைத்தார். ஆனால் வீட்டில் பாடம் சொல்லிக் கொடுக்கவோ ஆங்கிலம் கற்றுக்கொடுக்கவோ ஆளில்லை. அப்பா அம்மா இருவரும் பெரியளவில் படிக்காததால் நானே படித்துக்கொள்வேன்.
ஆங்கிலப் பயிற்சி
கல்லூரிப் படிப்பு முடித்த பின்னர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். அப்போது ராஜபாளைய சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அந்தப் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஆங்கிலம் பேச மிகவும் சிரமப்பட்டதை உணர்ந்து, நாம் ஏன் ஆங்கிலப் பயிற்சி வகுப்பு மட்டும் பிரத்யேகமாக நடத்தக் கூடாது எனத் தோன்றியது.
நிறுவனப் பெயர்
இதையடுத்து எனது குடும்பத்தினர் தந்த ஊக்கத்தின் காரணமாக ராஜபாளையத்தில் Kaizen ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் தொடங்கினேன். Kaizen என்பது ஜப்பானிய சொல், அதாவது தொடர்ந்து முன்னேற்றம் என்று அர்த்தம். இதனால் அந்தப் பெயரை எனது ஸ்போக்கன் இங்கிலீஷ் நிறுவனத்திற்கு சூட்டினேன்.
பயிற்சிக் கட்டணம்
மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதை போல் ஊரில் கட்டணம் வசூலிக்க முடியாது. ஏனென்றால் கூலி வேலைக்கு செல்வோர் வீட்டுப் பிள்ளைகளும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் தான் பயிற்சி வகுப்பையே தொடங்கினேன். ஒரு சிலர் கட்டணம் செலுத்துவார்கள், ஒரு சிலர் குடும்ப சூழல் காரணமாக செலுத்தமாட்டார்கள். அவர்களிடன் நான் பணம் கட்டுமாறு நிர்பந்திக்க மாட்டேன்.
கால மாற்றம்
முதலில் மிக குறைந்த எண்ணிக்கையில் தான் ஆங்கிலம் கற்க வந்தவர்கள், அப்போது ஆங்கிலம் பேசுவது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. வழக்கமான கிராமர்களை கூறி போர் அடிக்காதபடி எளிய நடையில் ஆங்கிலம் பேசக் கற்றுக்கொடுப்பதால், நாளடைவில் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கினார்கள். பிறகு கால மாற்றத்திற்கேற்ப யூ டியூப் களிலும் வீடியோ வெளியிடத் தொடங்கினேன்.
பதவி உயர்வுக்கு தடை
இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பலரும், ஆன்லைன் மூலம் ஆங்கிலம் வகுப்புகள் எடுக்கக் கூறினர். சரளமாக ஆங்கிலம் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிந்த ஆங்கிலத்தை வைத்து சமாளித்து வருவதாகவும் பலரும் தெரிவித்தனர். தங்களுக்கு சரளமான ஆங்கிலம் வராததால் பதவி உயர்வுக்கு அது தடையாக இருப்பதாக பி.இ. முடித்தவர்கள் கூட பலர் தெரிவித்தனர்.
விழிப்புணர்வு
எனது லட்சியம் வெறுமனே பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, ஆங்கிலம் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்பது தான். ஆண்டுக்கு ஆயிரம் பேர் வரை ஆங்கிலம் பயிற்சி பெறுகிறார்கள், அவர்களில் பாதிக்கு பாதி பேர் நல்ல நிலையில் உயர்ந்த நிறுவனத்தில் பணியில் இருக்கிறார்கள். இதைவிட வேறு என்ன மன நிம்மதி வேண்டும் என தனது அக்கறை குரலை வெளிப்படுத்துகிறார் மலர்விழி.