டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு, அமைச்சர்களிடம் சரமாரி கேள்வி ... 2020ல் விருதுநகர் டாப் 10 நிகழ்வுகள்!
விருதுநகர்: 2020-ம் ஆண்டின் தொடக்கம் முதல் கடைசிவரை கந்தக பூமியான விருதுநகர் கொந்தளிப்புடனேயே இருந்தது. ஆண்டின் தொடக்கத்தில் டிஎஸ்பிக்கே அரிவாள் வெட்டு விழுந்தது. ஆண்டின் இறுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சால் விருதுநகரே போர்க்களமானது.
Recommended Video
2020-ம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த டாப் 10 நிகழ்வுகள்:
1) விருதுநகர் அருகே நரிக்குடியில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது (ஜன.11). அப்போது ஒன்றிய அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற கும்பலை தடுத்த டிஎஸ்பி வெங்கடேசன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையில் ரத்தம் சொட்ட சொட்ட துப்பாக்கியுடன், அரிவாளால் வெட்டிய கும்பலை டிஎஸ்பி வெங்கடேசன் சல்லடை போட்டு தேடிய வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2) நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக அதிமுக ஏன் வாக்களித்தது? என அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜியிடன் நிலோபர் பாத்திமா என்ற பெண் சரமாரியாக கேள்வி கேட்ட சம்பம் (மார்ச் 16) பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி கேட்க, அவரை அமைச்சர்கள் சமாதானப்படுத்தினர்.
3) சாத்தூர் சிப்பிப்பாறை ராஜேஸ்வரி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது (மார்ச் 20). இந்த வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல்சிதறி பலியாகினர்.
4) கொரோனா பரவல் காலத்தில் டெல்லி நிஜாமுதின் பகுதியில் நடந்த மத மாநாட்டிற்கு சென்றுவிட்டு 4 பேர் ராஜபாளையம் திரும்பினர். அந்த 4 பேருக்கும் கொரோனா அறிகுறி இருந்ததால் அவர்கள் வசித்து வந்த ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதிக்கு சீல் வைத்த போலீசார் அந்த பகுதியில் சங்கிலியை கட்டி யாரையும் வெளியேறவிடாமல் பாதுகாத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது (ஏப்.1)
5) மனைவியுடனான குடும்பத் தகராறில் விருதுநகர் அருகே போத்திரெட்டிபட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவர் 1 வயது குழந்தைக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் அதே விஷத்தை குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்தது. (ஏப்.19)
6) விருதுநகரில் வீதியில் சென்ற சிறுவர்களை அழைத்து வலுக்கட்டாயமாக வாயில் மது ஊற்றி வேடிக்கை பார்த்த இளைஞர்களின் கொடூர செயல் குறித்த சிசிடிவி வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
7) விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மலர்விழி என்பவர் ஆங்கிலம் பற்றிய விழிப்புணர்வை கிராமப்புற மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தினார். கல்லூரிக் காலம் முடிந்த பின்னரும் ஆங்கிலம் பேசத் தெரியாததால் வாய்ப்பை தவறவிட்டு தவிக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு எளிய நடையில் ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். (அக்.30)
8) திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பற்றி தரக்குறைவாக பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து திமுகவினர் விருதுநகரில் உருவபொம்மையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு எதிராக அதிமுகவினரும் களத்தில் குதிக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் விருதுநகரே போர்க்களமாகிப் போனது. (டிச.7)
9) நிவர் புயலால் ஶ்ரீவில்லிப்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் சின்ன வெங்காயம் அழுகல் நோயில் சேதமடைந்தது. இதனால் செய்வதறியாது விவசாயிகள் கவலையில் மூழ்கினர்.
10) விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல், கடந்த 2014ல் 10 சிறுமிகளை டிவியில் கார்ட்டூன் படம் காண்பிப்பதாக தனது வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்கவேலு சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது (டிச.9)