அதிமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் எந்த நலத்திட்டமும் இல்லை -சாத்தூர் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
விருதுநகர்: அதிமுகவுக்கு வாக்களித்தால் காலுக்கு செருப்பாக இருந்து உழைப்பேன் என்றும், அதேவேளையில் வாக்களிக்காவிட்டால் எந்த நலத்திட்டமும் கிடையாது என்றும் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் கூறியிருக்கிறார்.
தனது தொகுதிகுட்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை மறந்து, எம்.எல்.ஏ.வாக பதவியேற்றபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு அவர் இவ்வாறு பேசியுள்ளதாக திமுகவினர் புகார் எழுப்பியுள்ளனர்.
மாணவர்கள் போராட்டம்.. கலவரங்கள் ஏன்.. அதுவும் இங்கெல்லாம்தான் நடக்குது.. சரத்குமார் பகீர் புகார்
புதிய எம்.எல்.ஏ.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன். எப்போதும் மஞ்சள் சட்டை சகிதமாக வலம் வரும் அவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் மிகத் தீவிர ஆதரவாளர். அமைச்சரின் கண் அசைவிற்கேற்ப காரியங்கள் ஆற்றக் கூடியவர்.
எம்.எல்.ஏ.சீட்
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார் இந்த ராஜவர்மன். அவருக்கு சீட் வாங்கிக் கொடுத்ததோடு அவருக்காக செலவழித்து வெற்றிபெறவும் வைத்தார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. இப்படி எம்.எல்.ஏ.வாக ஆகி 6 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில், அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டால் மட்டுமே நலத்திட்டம் என மிரட்டல் தொணியில் பேசியிருக்கிறார் ராஜவர்மன்.
மறந்துவிட்டார்
ராஜவர்மன் தாம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை அடியோடு மறந்துவிட்டு, மூன்றாம் தர பேச்சாளர்களை போல் பேசியுள்ளதாகவும், பதவிக்குரிய மாண்பை இழந்து அவர் நடந்துகொண்டதாகவும் திமுக தரப்பில் புகார் கூறப்படுகிறது. மேலும், எங்களுக்கு ஓட்டுப்போட்டால் தான் உங்களுக்கு அரசு திட்டம் என்பது மக்களை மிரட்டும் செயல் என விமர்சிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்ட அரசியல்வாதிகளையும், சர்ச்சையையும் பிரிக்க முடியாது போல் தெரிகிறது. தாமரைக்கனி காலம் தொடங்கி ராஜவர்மன் வரை அதிரடி கருத்துக்களை கூறுவது தொடர்கதையாக உள்ளது. இதனிடையே அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர் கூறும் கருத்துக்களும் அவ்வப்போது சர்ச்சையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.