சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு - பலர் கவலைக்கிடம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் அதிக தீ காயங்களுடன் சிவகாசி, சாத்தூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
Recommended Video
சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மாரியம்மாள் என்ற பெரியரில் பட்டாசு ஆலை அச்சங்குளத்தில் இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில் 35க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் வழக்கம்போல் ஆலையில் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஓர் அறையில் பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இதனால் அடுத்தடுத்து உள்ள 6 அறைகளிலும் பட்டாசுகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
தகவலறிந்த ஏழாயிரம்பண்ணை போலீஸார் மற்றும் சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மற்றும் காயம்பட்ட நபர்கள் அனைவரும் மீட்கப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேர் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் சிவகாசி மருத்துவமனையில் இருந்து மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்4 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளி விடுமுறை முடிந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ரா.கண்ணன், எஸ்.பி. பெருமாள் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரிக்கும்போது இதுபோன்ற விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருவதாக, பட்டாசு ஆலை போர்மென் ஒருவர் கூறினார். விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை விதிமீறலாகக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.