சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியோனோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு - 20 பேர் படுகாயம்
சிவகாசி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்று நிகழ்ந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. 20 படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரும் கவலைக்கிடமான வகையில் இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Recommended Video
சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் சிறியதும் பெரியதுமாக உள்ளன. அங்கு அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
கடந்த 12ஆம் தேதி அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன. 23 பேர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்த சில தினங்களில் காக்கிவாடன் பட்டியில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் காயமடைந்தார்.
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தங்கராஜ் பாண்டியன் பட்டாசு ஆலையில் இன்று மாலை பேன்ஸி ரக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
இதில் அறைக்குள் சிக்கியிருந்த ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து சிதறி வருவதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டன.
இடிபாடுகளில் சிக்கிய பத்துக்கும் மேற்பட்டோர் 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டிட இடிபாடுகளில் மேலும் பல தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 2 வாரத்தில் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நிகழ்ந்த 3வது விபத்தாகும். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீக்காயங்களுடன் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.