ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி வனப்பகுதிக்குள் சாமியார் எலும்புக்கூடு கண்டெடுப்பு
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி வனப் பகுதியில் சாமியார் ஒருவரின் உடல் எலும்புக் கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது சதுரகிரி. இந்த வனப் பகுதி பரந்து விரிந்தது. இங்குள்ள சுந்தரமகாலிங்கம் கோவில் மிகப் பிரசித்தமானது.
இந்த நிலையில், தாணிப்பாறை வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை மற்றும் காவல்துறையினர் பாலமலை என்ற வனப்பகுதிக்குள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மண்டை ஓடு, எலும்புகள், காவி உடை, ருத்ராட்ச கொட்டை , கைத்தடி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் அவை ஒரு சாமியாரின் உடலாக இருக்கக் கூடும் என்ற ஊகத்திற்கு போலீஸார் வந்துள்ளனர்.
அவற்றைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவற்றை எடுத்துச் சென்றனர். சாமியார் யார், கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் சாப்டூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.