நிர்மலா தேவிக்கு மீண்டும் ஜாமீன்
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மீண்டும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவட்டார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி , உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக நிர்மலாதேவி ஆஜர் ஆகாத நிலையில் அவரை ஜாமீனை ரத்து செய்தும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் பேராசிரியர் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நிர்மலாதேவி ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகாராஜன் நிர்மலாதேவி வழக்கு விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும் என நிபந்தனை இட்டு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், பேராசிரியர் நிர்மலா தேவிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிர்மலாதேவியை சந்திப்பதற்கு அவரது உறவினர்களுக்கும் வழக்கறிஞருக்கு சிறைத் துறை அனுமதி அளிக்கவில்லை எனவும், சிறையில் காவலர்களால் நிர்மலாதேவி கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் காயம் வெளியில் தெரிந்து விடும் என்பதால் இன்று நிர்மலாதேவியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் பேராசிரியர் நிர்மலாதேவி இந்த வழக்கிற்கு தொடர்புடைய அமைச்சரின் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் பசும்பொன் பாண்டியன் தெரிவித்தார்.