மர்ம கும்பல் அட்டகாசம்.. விருதுநகர் பள்ளியில் புகுந்து திருட்டு.. கார் கண்ணாடியும் உடைப்பு
விருதுநகர்: விருதுநகரில் உள்ள தனியார் நடுநிலைப் பள்ளியில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் பள்ளியின் பூட்டை உடைத்து 3 கணினிகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ 5 ஆயிரம் ரொக்கப்பணம் திருடி தப்பினர்.
போகும்போது, பள்ளி வளாகத்தில் நின்றிருந்த காரின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளது இந்த துணிகர கும்பல்.
விருதுநகர் அகமது நகர் அய்யனார் தெருவில் செயல்பட்டு வரும் தனியார் நடுநிலைப் பள்ளியில் நேற்று நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கணினி அறையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மூன்று கணினிகளை திருடிச் சென்றுள்ளனர். மேலும் அலுவலக அறையை உடைத்து பீரோவில் இருந்த ரூ 5 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்த காரின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இன்று காலை பள்ளி திறப்பதற்காக வந்த ஆசிரியர்கள் பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் பள்ளியின் உள்ளே சென்று பார்த்தபோது கணினிகள் மற்றும் ரொக்க பணம் திருடு போனது பள்ளியின் வகுப்பறை கண்ணாடிகள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளைபோன கணினிகள் மற்றும் ரொக்கப்பணம் குறித்து வழக்கு பதிவு செய்து மேலும் கொள்ளையர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் மைய பகுதியில் செயல்பட்டு வரும் நடுநிலைப்பள்ளியில் நள்ளிரவில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது