Fire Accident: சிவகாசி அருகே வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது விபரீதம்.. 3 பேர் பலி!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயகரிசல் குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். சட்டவிரோதமாக தயாரித்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசியை அடுத்துள்ள விஜயகரிசல் குளத்தில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல இன்று அங்கு பலர் பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வில் பட்டாசுகள் வெடித்துச் சிதறி உள்ளன. தீ மளமளவென பரவி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் உடல் சிதறி பலியாகினர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாதத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த வெடி விபத்துகளில் 16 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இதுபோன்று அனுமதியின்றி வீடுகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்தி சட்ட விரோத பட்டாசு தயாரிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications