நள்ளிரவில் கதவை தட்டி.. பெண்களிடம் சேட்டை செய்த 'காம' காவலர் கபிலன்.. சுற்றிவளைத்த பொதுமக்கள்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் முதுகுடி பகுதியில் நள்ளிரவில் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற காவலரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
Recommended Video
இந்தியாவில் அடங்காமல் ஆட்டம் போட்டு திரியும் கொரோனாவுக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு வருபவர்கள் முன்கள பணியாளர்கள்.
விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தோள்கொடுக்கும் காவலர்கள்
முன்கள பணியாளர்கள் வரிசையில் முதல் இடத்தில் அமர்ந்திருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியார்களின் பங்களிப்பை வெறும் வார்த்தையால் விவரித்து விட முடியாது. முன்கள பணியாளர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பவர்கள் போலீசார். மழை, புயல், வெள்ளம் என பேரிடர் காலங்களில் மக்களுக்கு தோளோடு, தோள் நின்று உதவுபவர்கள் போலீசார்.
களங்கம் ஏற்படுத்தும் காக்கிகள்
மக்களை காக்கும் உன்னத பணியில் ஈடுபடும் காவலர்களில் களங்கம்மிக்க சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க உதாரணம் இன்றும் நம் கண்ணை விட்டு அகலாத சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு. தற்போது ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் ஊரடங்கை காரணமாக வைத்து மக்களை தேவையில்லாமல் துன்பப்படுத்தும் சில காவலர்கள் வலம் வரத்தான் செய்கிறார்கள்.
ரோந்து பணி
இந்த வரிசையில் இடம் பிடித்து இருப்பவர்தான் காவலர் கபிலன். விருதுநகர் மாவட்டம் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேல ராஜகுல ராமன் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார் கபிலன். ஊரடங்கு காலம் என்பதால் விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க கபிலன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி செல்வது வழக்கம்.
கபிலன் செய்த சேட்டை
இந்த ரோந்து பணியின்போது கபிலன் செய்த காரியம்தான் அவரது காக்கி சட்டையில் கறைபடிய காரணமாக இருந்துள்ளது. தனது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதுகுடி பகுதியில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்ட கபிலன், அந்த பகுதியில் ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை திறக்கும் பெண்களிடம் ''தனியாக வா '' என்று கூறி தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.
சுற்றி வளைத்த மக்கள்
பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் பல வீடுகளை குறிவைத்து கதவை தட்டி தனது சேட்டைகளை அரங்கேற்ற முயன்றுள்ளார் கபிலன். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் சத்தமிட்டு ஊரை எழுப்பினார்கள். அப்பகுதி மக்கள் 'சபல புத்தி' கொண்ட காவலரை சுற்றி வளைத்தனர். ''வேலியே பயிரை மேய்வது'' போல் காக்க வந்த காவலரே களங்கம் ஏற்படுத்த முயலலாமா?'' என்று அவரை கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
நடவடிக்கை பாயுமா?
தொடர்ந்து பொதுமக்கள் காவலர் கபிலனை பிடித்து அவர் பணிபுரியும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கபிலனிடம் மக்கள் விசாரிக்கும் காட்சிகள் சமூக வலைத்தங்களில் வைரலாக பரவி வருகிறது. கபிலன் போன்று ஒருசில காக்கிகள் செய்யும் சேட்டைகள் ஒட்டுமொத்த தமிழக காவல் துறைக்கே அவமானத்தை தேடி தருகிறது. இனிமேலாவது இது போன்ற காக்கி சட்டைகள் திருந்துவார்களா?