பழிக்குப் பழி.. திமுக எம்பியின் சித்தப்பாவை கொன்றது ஏன்.. திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்!
திமுக எம்பியின் சித்தப்பாவை கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ராஜபாளையம்: பழிக்குப்பழி வாங்கவே.. திமுக எம்பி சித்தப்பாவை கொன்றோம் என்று 2 இளைஞர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர். கருப்பையாவை கழுத்து அறுத்து கொலை செய்த 2 பேரையும் நம் போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்து விட்டனர்!
ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் தென்காசி தொகுதி எம்பி தனுஷ்குமாரின் சித்தப்பா. இவர் ரேசன் கடை எடையாளர்கள் சங்க தலைவர் ஆவார். ஊர் சமுதாய தலைவராகவும் இருந்தவர்.
இவர், நேற்று முன்தினம் மாலை வயலுக்கு போவதாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவே இல்லை. இந்நிலையில், இரவு 10 மணியளவில் பிரம்மகுளம் கண்மாய் பகுதியில் கருப்பையா கழுத்து அறுக்கப்பட்டு, சடலமாக கிடந்தார்.
கருப்பையா
தகவலறிந்து சேத்தூர் போலீசார் விரைந்து வந்து, கருப்பையா உடலை கைப்பற்றினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தனர். ஒருவேளை முன்விரோதம் காரணமாக கருப்பையா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்தது. அது தற்போது ஊர்ஜிதமாகியும் உள்ளது.
சமூக விரோத செயல்
ஒரு மாதத்துக்கு முன்பு தேவதானத்தில் கோயில் திருவிழா ஒன்று நடந்துள்ளது. அப்போது, கோயில் பக்கத்திலேயே சில இளைஞர்கள் சமூக விரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். இதை பார்த்த கருப்பையா, கோயில் பக்கத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்ள கூடாது என்று சத்தம் போட்டுள்ளார்.
வாபஸ் வாங்க மறுப்பு
அந்த இளைஞர்கள் எல்லாருமே போதையில் இருந்துள்ளனர். அதனால் கருப்பையாவை தகாத வார்த்தையால் பேசி உள்ளனர். இதனால் அவர்கள் மீது கருப்பையா ஸ்டேஷனில் புகார் தந்தார். இந்த புகாரை வாபஸ் வாங்குமாறு, அவர்கள் மிரட்டி வந்துள்ளனர். ஆனால் கோயில் அருகே அத்துமீறியது தவறுதான் என்று சொல்லி, கருப்பையா புகாரை வாபஸ் வாங்க மறுத்துவிட்டார்.
வாக்குமூலம்
இந்த ஆத்திரத்தில்தான் கொலை செய்தோம் என்று 2 இளைஞர்கள் வாக்குமூலம் தந்துள்ளதாக போலீசார் சொல்கிறார்கள். ராஜேந்திரன், விக்னேஷ் என்பவர்கள்தான் அவர்கள். கழுத்தை கொடூரமாக அறுத்த இந்த இளைஞர்களுக்கு வயது 18, 19 என்பதுதான் நமக்கு வேதனை கலந்த அதிர்ச்சியாக உள்ளது.