காதல் திருமணம்.. இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய பெண் வீட்டார்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாற்று ஜாதியை சேர்ந்த பெண்ணுடன் இளைஞர் ஒருவர் மாயமானதை அடுத்து அவரது 45 வயது மதிக்கத்தக்க தாயை பெண் வீட்டார் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
அருப்புக்கோட்டை அருகே பரளச்சி கே.வாகைக்குளத்தை சேர்ந்தவர் மீனாட்சி (45). இவருடைய மகன் சக்தி சிவா (24). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
பழனி முருகனுக்கு 20 டன் பஞ்சாமிர்தம்... குளிர குளிர அபிஷேகம் செய்து வழிபட்ட பருவத ராஜகுல மக்கள்
இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுதா என்பவரின் மகள் புவனேஸ்வரி (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் மாற்று ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு
காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள நினைத்து கடந்த 22-ஆம் தேதி ஊருக்கு வந்த சக்திசிவா புவனேஸ்வரியுடன் மாயமானார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவீட்டாரும் சக்திசிவா மற்றும் புவனேஸ்வரியை பல இடங்களில் தேடியுள்ளனர்.
உறவினர்கள்
இந்நிலையில் நேற்று மாலை சக்திசிவாவின் வீட்டிற்கு உறவினர்களுடன் வந்த புவனேஸ்வரியின் தாய் சுதா தனது மகள் எங்கே என கேட்டு பிரச்சனை செய்ததாக தெரிகிறது. அப்போது திடீரென சக்திசிவாவின் தாய் மீனாட்சியை, சுதா மற்றும் அவருடைய உறவினர்கள் தரதரவென இழுத்துச்சென்று சாலையில் உள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.
பரளச்சி போலீஸார்
பின்னர் காமாட்சியை சரமாரியாக தாக்கினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பரளச்சி போலீசார் மீனாட்சியை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக சுதா அவரது உறவினர்கள் நாகவள்ளி, செல்வி, துரைப்பாண்டி உள்ளிட்ட 14 பேர் மீது பரளச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருப்புக்கோட்டை மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனாட்சியின் உறவினர்கள் அந்த 14 பேரையும் கைது செய்ய வலியுறுத்தியும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
அங்கு வந்த நகர காவல் துறையினர் மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானம் செய்து பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். போலீசாரின் சமாதானத்தை ஏற்ற மீனாட்சியின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.