விருதுநகர்: எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர்: எரிச்சநத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியிலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியிலும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசு வெடி விபத்து ஏற்படுவது வழக்கமான நிகழ்வாகி வருகிறது. விபத்துகளை தவிர்க்க பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
இந்த நிலையில் இன்று விருதுநகர் மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ராஜலட்சுமி பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன தீயை அணைக்கும் பணியில் ஏராளமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இரவு பகலாக ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.