மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்.. விருதுநகரில் சோகம்
விருதுநகர்: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானமாக கொடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி தேவகி. இவர் கடந்த 17-ஆம் தேதி விபத்தில் சிக்கினார். இதையடுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தேவகி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தேவகியின் சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் ஆகியன நல்ல நிலையில் இருந்தன.
இதனால் அவரது உறுப்புகளை தானமாக அளித்தால் மற்றவர்கள் மறுவாழ்வு பெறுவர் என மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து உறுப்பு தானத்துக்கு கணவர் கிருஷ்ணகுமார் ஒப்புக் கொண்டார்.
5 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு, தேவகியின் உறுப்புகள் அகற்றப்பட்டு 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. அதன்படி ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி கிட்னி கேர் சென்டரில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டன.