சாத்தூர் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு
விருதுநகர்: சாத்தூர் வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்த பட்டாசு தொழிலை நம்பியே உள்ளன.
இருப்பினும், பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது வெடிவிபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் விபத்து தொடர் கதையாகிறது.
இந்தநிலையில், இன்று சாத்தூர் பகுதியிலுள்ள அச்சங்குளம் கிராமத்தின் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் 10-க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்தன. இந்த விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார். அதேபோல், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 12 பேர் பலி - 20 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை
முன்னதாக, இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்ச ரூபாய் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.