விருதுநகரில் ரூ. 10-க்கு சேலை.. முண்டியடித்த பெண்கள்.. டோக்கன் கொடுத்தவருக்கு மூச்சுத் திணறல்
Recommended Video
விருதுநகர்: விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே புதிதாக தொடங்கப்பட்ட துணிக் கடையில் ரூ. 10-க்கு புடவை விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரத்தை அடுத்து அக்கடை முன் அதிகாலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது.
அப்போதெல்லாம் ஊருக்கு ஒரு துணிக் கடை இருக்கும். ஆனால் இப்போதோ ஒரு தெருவுக்கு ஒரு துணிக்கடை என வந்துவிட்டது. அதிலும் பெரிய பெரிய சாலைகள் என்றால் ஏராளமான கடைகள் உள்ளன.
இதில் வியாபாரம் ஆக வேண்டும் எனில் கவர்ச்சியான விளம்பரங்கள் தேவை. என்னதான் நடிகர், நடிகைகளை கொண்டு கடைகளை திறந்தாலும் தள்ளுபடி, ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் போன்ற அறிவிப்புகளையே மக்கள் விரும்புகின்றனர்.
கடை திறப்பு
இதுபோன்ற அறிவிப்புகள், ஆண்டின் இறுதியில் நடக்கும் விற்பனை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், புதிய கடைத் திறப்பு விழா உள்ளிட்டவைகளின் போது மக்களுக்கு கிடைக்கும். அந்த வகையில் விருதுநகரில் பழைய பேருந்து நிலையம் அருகே புதிதாக இன்று துணிக் கடை திறக்கப்பட்டது.
கடைக்கு குவிந்த பெண்கள்
இந்த திறப்பு விழாவையொட்டி முதலில் வரும் 100 பேருக்கு ரூ. 300 மதிப்பிலான சேலைகள் ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் சேலைகளை வாங்குவதற்காக காலை 9 மணிக்கு திறக்கப்படும் கடைக்கு அதிகாலை 5 மணிக்கே வந்து குவிந்தனர்.
வாக்குவாதம்
இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை, ஆண்களும் வரிசையில் குவிந்தனர். வரிசையில் நிற்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் பெண்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ரூ. 10-க்கு புடவை
இதையடுத்து டோக்கன் கொடுப்பவர் வந்தவுடன் வரிசையில் நிற்காத பெண்கள் டோக்கன் கொடுக்கும் நபரை சூழ்ந்து கொண்டதால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து ஒரு வழியாக டோக்கன் பெற்றவர்களுக்கு ரூ. 300 மதிப்பிலான சேலைகள் ரூ. 10-க்கு வழங்கப்பட்டன.
மகிழ்ச்சி
இன்னும் சிலர் கடைக்காரர்கள் கொடுக்கும் சேலையை வேண்டாம் என கூறிவிட்டு தங்களுக்கு பிடித்தமான சேலை வேண்டும் என அடம்பிடித்தனர். இதனால் வேறு வழியின்றி ஊழியர்களும் கொடுத்துவிட்டனர். குறைந்த விலையில் சேலை வாங்கிய மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.