கந்தக பூமியில் கருகும் உயிர்கள்... 2012ல் முதலிப்பட்டி 2021ல் அச்சங்குளம் - நிரந்தர தீர்வு என்ன
கந்தக பூமியான சிவகாசியில் கடந்த 11 ஆண்டுகளில் நிகழ்ந்த 161 விபத்துகளில் 316 பேர் மரணமடைந்துள்ளனர். விபத்து நடக்கும் போது பரபரப்பாக பேசப்படுவதும் அடுத்து சில நாட்களில் மறக்கப்பட்டு விடுவதுமாக இருக்கிறது.
விருதுநகர்: பட்டாசு வெடித்து பூ பூவாய் வானத்தில் சிதறும் போது அதை பார்க்கும் மனம் குதூகலிக்கும். பட்டாசு வெடிக்கும் போது எல்லோருமே குழந்தையாக மாறி ரசிப்பது வாடிக்கைதான். அந்த பட்டாசுகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் தினம் தினம் செத்து பிழைக்கிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்பது போலத்தான் இவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. 2012ஆம் ஆண்டு முதலிப்பட்டியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் கருகிப்போயினர். பிப்ரவரி 12,2021 வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் 35 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை விடிந்த உடன் கையில் டிபன்பாக்ஸ் எடுத்துக்கொண்டு வழக்கம் போல பட்டாசு ஆலைக்குப் போன தொழிலாளர்கள் பலருக்கும் தெரியவில்லை இன்றோடு நமக்கு வாழ்க்கை முடியப்போகிறது. திடீரென்று வெடித்து சிதறிய பட்டாசுகளால் ஆலைகள் சிதறி பல உயிர்களை காவு வாங்கி விட்டது. மதிய உணவு கூட முடியவில்லை கொண்டு போன உணவுப் பைகள் சிதறிக்கிடக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி உயிர்களை விட்டுள்ளனர் கல்லூரி மாணவியும் கர்ப்பிணி பெண்ணும். கனவுகளோடு பலரும் மரணித்து போகவே கருப்பு வெள்ளியாக முடிந்து போனது.
கந்தக பூமியான விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த 11 ஆண்டுகளில் நிகழ்ந்த 161 விபத்துகளில் 316 பேர் மரணமடைந்துள்ளனர். விபத்து நடக்கும் போது பரபரப்பாக பேசப்படுவதும் அடுத்து சில நாட்களில் மறக்கப்பட்டு விடுவதுமாக இருக்கிறது. இந்த விபத்துகளையும் உயிரிழப்புகளை தடுக்கவும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியாவின் தேவையில் 90 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. பட்டாசு தொழிற்சாலையில் நேரடியாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், மறைமுகமாக 8 லட்சம் தொழிலாளர்களும் பட்டாசு தொழிலை சார்ந்தே உள்ளனர். இங்குள்ள பட்டாசு ஆலைகளில் கடந்த 2010 முதல் 2021 வரை மொத்தம் 161 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 316 பேர் மரணமடைந்துள்ளதாக கூறுகிறது புள்ளி விபரம் ஒன்று.
தீபாவளி, திருக்கார்த்திகை, புத்தாண்டு பண்டிகை தினங்களுக்காக வித, விதமான பட்டாசுகளை தயாரித்து, ஆண்டுதோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் உற்பத்தியாளர்கள். இதற்கென முறையாக பின்பற்றவேண்டிய விதிமுறைகளை ஆலை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் உடனடியாக அதனை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும். ஆனால் இவையெல்லாம் பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.
சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு - பலர் கவலைக்கிடம்
தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு பட்டாசு தொழிற்சாலைகள் என சுமார் 900 உள்ளன. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் 850 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இதில், சிவகாசி தான் பட்டாசு தயாரிப்பின் அங்கமாக திகழ்வதுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது.
850 பட்டாசு ஆலைகளில் 164 பட்டாசு ஆலைகள் வருவாய் வட்டாட்சியரின் கீழும், 650 பட்டாசு தொழிற்சாலைகள் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியின் கீழும் உள்ளன. முதலிபட்டி பகுதியில் மட்டும் தோராயமாக நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. அத்தனையும் எந்த நேரமும் வெடிவிபத்தை ஏற்படுத்தக் கூடிய மிக ஆபத்தான இரசாயனப் பொருட்களைக் கையாளும் ஆலைகள்.
இங்கிருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல்வேறு வெடி விபத்துகள் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்துள்ளன.
கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த விபத்தில் 21 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர், லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் சேதமடைந்தன. 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை சிவகாசி பட்டாசு ஆலைகளில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.
2012ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி முதலிப்பட்டியில் கடந்த நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 39 பேர் உடல் கருகி பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தமிழகத்தையே உலுக்கியது. அதே மாதம் 28ம் தேதி விஜயகரிசல்குளத்தில் வீட்டிற்குள் வைத்து பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலியாகினர்.
இந்த விபத்திற்குப் பிறகுதான் பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அவை முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் அடுத்ததுத்து விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர் கந்தக பூமியில் உயிர்கள் கருகுவது தொடர்கதையாகி வருகிறது.
இன்றைய தினம் அச்சங்குளத்தில் நிகழ்ந்த மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் கருகி உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடைபெறும் முன் ஆய்வு செய்து தடுப்பதை விட்டு விட்டு விபத்து நிகழ்ந்த பிறகு ஆலையை மூடி சீல் வைப்பதும் கைது செய்வது நிரந்தர தீர்வாகாது என்பது உயிரிழந்த உறவினர்கள் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.