மத்தியஸ்தம் தேவையில்லை... நாங்களே ராமர் கோவிலை கட்டுவோம்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஆவேசம்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்தியஸ்தம் தேவையில்லை. இந்து மக்கள் ஒன்று சேர்ந்து ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ராமானுஜ ஜீயர் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீர வேண்டும் என்று இந்து மக்கள் அனைவரும் ஒரே மனபான்மையில் இருக்கிறார்கள். அயோத்தியில் இராமஜென்ம பூமியில் அவரது இடத்தில் கோவில் கட்டுவதில் மத்தியஸ்தம் தேவையில்லை. இந்து மக்கள் ஒன்று சேர்ந்து ராமர் கோயில் கட்ட வேண்டும். இராமருக்கு கோவில் கட்டுவதற்கு பிரச்சனைகள் தேவையில்லை.
பங்குனி உத்திரம் 2019 - முருகன் தெய்வானை திருக்கல்யாணம் பார்க்க திருப்பரங்குன்றம் வாங்க
பாபரின் வாரிசு அயோத்தியில் ராமர் கோவில் தான் கட்ட வேண்டும் வேறு எந்த கோவிலும் கட்ட கூடாது என சொல்லியிருக்கிறார். இதற்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை தர வேண்டும். சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்கியது போல , 80 வருடங்களாக நடைபெறும் ராமர் கோயில் பிரச்சனைக்கு நீதிமன்றம் விரைவில் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.
ராமர் கோவில் கட்டுவதற்கு நீதிமன்றமும், மத்திய அரசும் நல்ல தீர்ப்பு சொல்லும் என நம்புகிறோம். ஓரிரு மாதங்களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்ரீ ராமபாத யாத்திரா என்னும் யாத்திரையை ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கி அயோத்திவரை ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை பயணம் மேற்கொள்ள போகிறோம்.இந்து மக்கள் ஒன்று சேர்ந்து இராமர் கோவில் இராமர் இடத்தில் கட்டியே தீர்வோம். அந்த இடத்தில் வேறு எந்த கோவிலும் வரக் கூடாது.
அயோத்தி விவகாரத்தில் மூன்று பேர் கொண்ட குழுவிற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் மத்தியஸ்தம் தேவையில்லை. மக்கள் ஒன்று சேர்ந்து எடுக்கும் முடிவுக்கு வேறு யாரும் வேண்டியதில்லை.
இந்து மக்கள் அனைவரும் நன்றாக புரிந்து இருப்பார்கள். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராமர் ஆட்சி அமையும் என்றார் ஜீயர்.