முதல் இடத்தில் இருந்த விருதுநகருக்கு என்ன ஆச்சு.. 7வது இடத்துக்கு போச்சு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற நிலையில் இந்த ஆண்டு 7வது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பது கல்வியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி என 4 கல்வி மாவட்டங்கள் இருக்கிறது.
இங்கு கடந்த ஆண்டு 24,297 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினார்கள். இதில் 23,580 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 97.05 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றது.
பிளஸ் 2 ரிசல்ட்: வர வர மோசமாகும் தருமபுரி மாவட்ட தேர்ச்சி விகிதம்
பல ஆண்டு முதலிடம்
மேலும், கடந்த 2001 முதல் 2010-2011 வரை பிளஸ் 2 தேர்வு தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டமே தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்தது. ஆனால் இடையில் 2011- 2012 முதல் 2015- 2016 வரை முதலிடத்தை இழந்தது. இதன் பின்னர், கடந்த 2017 மற்றும் 2018 இல் பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
214 மேல்நிலைபள்ளிகள்
இந்நிலையில் இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் .மொத்தம் உள்ள 214 மேல்நிலைப் பள்ளிகளில் 22,343 மாணவ மாணவிகள் 96 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இதில் 10,275 மாணவர்களும், 12,068 மாணவிகளும் அடக்கம். மேலும் தனித் தேர்தவர்கள் 237 மாணவர்கள், 429 மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
திருப்பூர் முதல் இடம்
இந்நிலையில் இன்று பிளஸ் தேர்வு முடிகள் வெளியாகி உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 94.41 சதவீத தேர்ச்சியுடன் 7வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 95.37 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.
நிச்சயம் மாறும்
கல்வியில் சிறந்த விளங்கும் விருதுநகர் மாவட்டம் இந்த முறை இப்படி பின்தங்கி போனதால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நல்ல முறையில் படிக்க வைத்தது தேர்ச்சி பெற வைப்பதில் பெயரெடுத்த விருதுநகர் ஆசிரியர்கள், வரும் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தை முதலிடம் பெற வைக்க நிச்சயம் முயற்சி செய்வார்கள் என்பது உறுதி. அதேநேரம் இந்த ஆண்டு என்னமாதிரியான பிரச்னைகளால் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.