ஓயாமல் பணம் கேட்டு நச்சரித்த ஈஸ்வரி.. கடுப்பான பக்கத்து வீட்டுக்காரர்.. கழுத்தை நெரித்துக் கொலை!
பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்
விருதுநகர்: ஓயாமல் பணம் கேட்டு நச்சரித்து வந்த அங்காள ஈஸ்வரியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார் பக்கத்து வீட்டுக்காரர் அடைக்கலம்!
அருப்புக்கோட்டை அருகே அத்திப்பட்டியை அடுத்துள்ள கட்டக்கஞ்சன்பட்டி என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் திருமுருகன். அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அங்காள ஈஸ்வரி, 35 வயது!
இந்நிலையில் நேற்று அங்காள ஈஸ்வரி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக அங்காள ஈஸ்வரியின் தந்தை காளிமுத்து அருப்புக்கோட்டை போலீசில் புகார் தந்தார். அதன்படி நடந்த விசாரணையில் திடுக் தகவல்கள் அம்பலமாகி உள்ளன.
பக்கத்து வீட்டில் வசிக்கும் அடைக்கலம் என்பவருடன் அங்காள ஈஸ்வரிக்கு கள்ள உறவு இருந்திருக்கிறது. அடைக்கலத்துக்கு 45 வயதாகிறது. தன் மீது அடைக்கலம் ஏகப்பட்ட ஆசையில் இருப்பதை அங்காள ஈஸ்வரி, அடிக்கடி பணம் கேட்டு வாங்கி உள்ளார்.
இதுவரை கொஞ்சம் கொஞ்சமாக 2 லட்சம் ரூபாய் வரை கறந்துவிட்டார். இதை தவிர இன்னும் பணம் வேண்டும் என்று அடிக்கடி அடைக்கலத்தை தொந்தரவும் செய்திருக்கிறார். இதனால் இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது.
நேற்றுகூட பணம் கேட்டு ஈஸ்வரி தொந்தரவு செய்ய, ஆவேசம் அடைந்த அடைக்கலம் அவரது கழுத்தை நெறித்து கொலையே செய்துவிட்டார். இதெல்லாம் போலீசார் விசாரணையில் உறுதியானதையடுத்து, அடைக்கலம் கைது செய்யப்பட்டார்.