அமெரிக்க கலவரம்... வன்முறையாளர்களுடன் தொடர்பு... பாதுகாப்பு பணியிலிருந்து 12 பேர் அதிரடி நீக்கம்
வாஷிங்டன்: வன்முறையாளர்களுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைப் பாதுகாக்கும் பணியிலிருந்து 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பெற்ற வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றத்தில் புகுந்து டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று வன்முறையில் ஈடுபட்டனர்.
அமெரிக்க வரலாற்றில் கறுப்பு நாளாக இது பார்க்கப்படுகிறது. டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த வன்முறையால் இரண்டு காவலர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு டிரம்ப் தான் காரணம் என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஊரெங்கும் தோரணம்..வீடுகளில் பலகாரம்..கமலா ஹாரிஸ் பதவியேற்பை திருவிழாவாக கொண்டாடும் துளசேந்திரபுரம்!
பாதுகாப்புப் பணி
மேலும், ஜோ பைடன் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், இந்த விழாவிலும் வன்முறை ஏற்படலாம் என்ற அஞ்சப்படுகிறது. இதனால், நாடாளுமன்ற கட்டடத்தில் பாதுகாப்புப் பணிகளில் சுமார் 25 ஆயிரம் தேசியப் பாதுகாப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாஷிங்டனில் நாளை வரை அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பணியிலிருந்து விடுவிப்பு
இந்நிலையில், வன்முறையாளர்களுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைப் பாதுகாக்கும் பணியிலிருந்து 12 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் ராத் ஹாஃப்மேன் கூறுகையில், "அவர்களுக்கு என்ன மாதிரியான தொடர்பு இருந்தது என்பது குறித்த விசாரணைக்கே நாங்கள் செல்வதில்லை.
ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை
தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டாலே அவர்களை பணியிலிருந்து நீக்குகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் நாங்கள் எவ்வித ரிஸ்க் எடுக்கவும் தயாராக இல்லை. தற்போது 12 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பணியிலிருந்து நீக்கப்படுவதாலேயே இவர்கள் அனைவரும் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றோ வரும் காலங்களில் எந்த பணிக்கும் தகுதிபெற மாட்டார்கள் என்றோ பொருள் இல்லை. இப்போதைக்கு இவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அவ்வளவுதான்" என்றார்.
கூடுதல் தகவல்கள் இல்லை
அதன்படி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட இரண்டு தேசியப் பாதுகாப்புப் படையினர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நாடாளுமன்றத்தில் மற்ற பணிகளிலிருந்து 10 பேரும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது என்ன பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும், என்ன மாதிரியான நடவடிக்கையால் இவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்தும் இவர்களின் பெயர் உள்ளிட்ட மற்ற தகவல்களையும் பகிர்ந்துகொள்ள ஜொனாதன் ராத் ஹாஃப்மேன் மறுத்துவிட்டார்.