அமெரிக்காவில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி.. முதல்முறையாக இப்படி ஒரு சம்பவம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கொரோனா பரவல் முன்பைவிட மோசமாகிவிட்டது, சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் இரண்டு கொரில்லா குரங்குகள் கொரோனா நோயால் பாதிக்கப்படுள்ளன. இதை உயிரியல் பூங்கா ஊழியர்கள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் மிக மோசமாக உள்ளது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் அவை வெற்றிகரமாக மக்களுக்கு முழு வீச்சில் வழங்கப்படவில்லை. தினமும் பல்லாயிரம் பேர் பாதிக்கப்படுவதும், ஆயிரக்கணக்கில் இறப்பதும் அமெரிக்காவில் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் இரண்டு கொரில்லாக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுள்ளன. இதை மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் உறுதி செய்துள்ளனர்.
அத்துடன் மூன்று கொரிலாக்ளுக்கு தற்போது கொரோனா வைரஸ்க்கான அறிகுறிகள் உள்ளது. அறிகுறியற்ற ஊழியரால் கொரோனா பாதிப்பு வந்திருக்கேமா என்ற சந்தேகம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய குரங்கான கொரில்லாவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என மிருகக்காட்சிசாலை கூறியுள்ளது. முந்தைய ஆராய்ச்சிகளில் சில விலங்கினங்களும் பாதிக்கப்படுவது தெரியவந்தது. பொதுவாக கொரில்லாக்கள் குடும்பமாக வாழ்கின்றன. எனவே அனைத்து கொரில்லாக்களுக்கும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த புதன்கிழமை தான் கொரோனா பாதிப்பு கொரில்லாக்களுக்கு ஏற்பட்டது தெரிய தொடங்கியது, மிருகக்காட்சிசாலைகளில் இரண்டு கொரில்லாக்களுக்கு இருமல் உண்டாக தொடங்கியது. ஆரம்ப சோதனையில் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படடது. அமெரிக்க வேளாண்மைத் துறையின் தேசிய கால்நடை சேவைகள் ஆய்வகமும் கடந்த திங்களன்று கொரோனா பாதிப்பை உறுதி செய்தது.
கொரில்லாக்களுக்கு ஏதேனும் கடுமையான எதிர்வினை இருக்குமா என்பது தெரியவில்லை .ஆனால் அவை உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாக உயிரில் பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.